
கேஸ் சிலிண்டர் விலையில் மிகப்பெரிய அளவில் மாநில அரசு வரியாக செல்கிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் எப்படி செய்யப்படுகிறது என்று ஆங்கிலத்தில் ஒரு பதிவு வெளியாகி உள்ளது. அதில் மத்திய அரசு 5 சதவிகிதமும் மாநில அரசுகள் 55 சதவிகிதமும் வரி விதிப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. நிலைத் தகவலில், “கேஸ் விலை ஏற்றம் யாரால் என்று பாருங்கள் மாநில அரசை தாங்கி பிடிப்பவர்கள் போராட்டம் செய்யும் அனைவரும் இதற்கு தகுந்த பதில் சொல்லுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Palanisamy என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஜூலை 15 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெட்ரோலிய பொருட்கள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரக்கூடியது என்பதால் பொது மக்கள் மத்திய அரசை கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வுக்கு மாநில அரசுகள்தான் காரணம் என்ற வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம், வரி தொடர்பாக பரவிய வதந்தி பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் கேஸ் சிலிண்டரின் அடிப்படை விலை ரூ.495 என்றும், மத்திய அரசின் வரி 24.75 என்றும், போக்குவரத்து செலவு ரூ.10 என்றும் குறிப்பிட்டு மொத்தம் ரூ.529.75 வருகிறது என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதனுடன் மாநில அரசு ரூ.291.36 வரி விதிப்பதாகவும், மாநில அளவில் போக்குவரத்து செலவுக்கு 15 ரூபாய் ஆகிறது என்றும், டீலர் கமிஷன் 5.50 காசு வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனுடன் 19.57 மானியம் என்று குறிப்பிட்டு அதையும் சேர்த்து மொத்தம் ரூ.861.18க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தனர்.
கேஸ் சிலிண்டரை மத்திய அரசின் நிறுவனங்கள் தான் விற்பனை செய்கின்றன. அதை முகவர்கள் வாங்கி வீடுகளுக்கு விநியோகிக்கின்றனர். அப்படி இருக்கும் போது எதற்கு இரண்டு முறை போக்குவரத்து செலவு வருகிறது என்பது புரியவில்லை. மேலும் மானியத்தை நம்மிடமிருந்தே வசூலித்துவிட்டு பிறகு நமக்கு அதை திரும்பத் தருகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மானியம் என்றால் என்ன என்ற புரிதல் கூட இல்லாமல் இந்த பதிவை உருவாக்கியிருப்பது தெரிந்தது.
டீலர்களுக்கு 5.50 ரூபாய் கமிஷன் என்ற தகவல் உண்மையானது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு பல மடங்கு கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதாக செய்தி படித்த நினைவு. எனவே, டீலர்களுக்கான கமிஷன் எவ்வளவு என்று பார்த்தோம். 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.61.33 கமிஷன் கிடைப்பதாக தகவல் கிடைத்தது.

அசல் பதிவைக் காண: khabarindia.inI Archive
கடந்த 2019ம் ஆண்டு சிலிண்டர்களுகான கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தியது பற்றிய செய்தி கிடைத்தது. அதன் படி ஒரு கிலோவுக்கு ரூ.5.63 என்ற அளவில் கமிஷன் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 14.2 கிலோ சிலிண்டருக்கு 61.84 ரூபாய் கமிஷனாக வழங்கப்படுவதாக செய்திகள் நமக்கு கிடைத்தன.

அசல் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive 1 I economictimes.indiatimes.com I Archive 2
விலை நிர்ணயம் எப்படி செய்யப்படுகிறது என்று பார்த்த போது அதற்கான சரியான விவரம் அரசு தளங்களில் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், வீட்டு உபயோக இயற்கை எரிவாயு சிலிண்டர்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது என்ற செய்தி கிடைத்தது. ஒவ்வொரு மாநில அரசுகளும் 14, 15 சதவிகிதம் என சிலிண்டர்களுக்கு மதிப்புக் கூட்டு வரி (வேட்) விதிக்கின்றன. இதை ஒழுங்குபடுத்த ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் கூறிய செய்தி கிடைத்தது. அதில் எந்த மாநில அரசும் 55 சதவிகிதம் வரி விதிப்பதாக குறிப்பிடவில்லை.
மேலும், கேஸ் சிலிண்டருக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாகவும் செய்திகள் கிடைத்தன. இதில் 2.5 மத்திய அரசுக்கு, 2.5 மாநில அரசுக்கு. ஜிஎஸ்டி வரிக்குள் வந்துவிட்டால் கூடுதல் வரிகள் விதிக்க முடியாது என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருப்போம்.

அசல் பதிவைக் காண: petroleum.nic.in I Archive
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டிருந்த ஜிஎஸ்டி-க்கு முன், ஜிஎஸ்டி-க்கு பின் ஒப்பீடு பட்டியலிலும் குறிப்பிடப்பட்டு இருந்தது. கூடுதலாக வேறு வரிகள் இல்லை என்பதையும் இதில் தெளிவாக குறிப்பிட்டிருந்தனர்.
தமிழ்நாடு எச்.பி கேஸ் விநியோகஸ்தர்கள் சங்க பொதுச் செயலாளர் தட்சிணாமூர்த்தி சில மாதங்களுக்கு முன்பு விகடனுக்கு அளித்த பேட்டியில் வரி, கமிஷன் உள்ளிட்ட விவரங்களை தெளிவாக கூறியிருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: vikatan.com I Archive
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கு ஜிஎஸ்டி உள்ள நிலையில், மாநில அரசு 55 சதவிகிதம் வரி விதிப்பதாக தவறான செய்தி பகிரப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கேஸ் சிலிண்டர்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு செல்லப்பட்டுவிட்ட நிலையில் மாநில அரசுகள் அதற்கு 55 சதவிகிதம் அளவுக்கு வரி விதிப்பதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கேஸ் சிலிண்டரிலும் லாபம் பார்க்கும் மாநில அரசுகள்?
Fact Check By: Chendur PandianResult: False
