மன்மோகன் சிங் பெற்றதைப் போல மோடிக்கு வெளிநாடுகளில் வரவேற்பு கிடைப்பதில்லையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

இந்தியப் பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது வெளிநாட்டில் பெரிய வரவேற்பு கிடைத்தது போலவும், மோடிக்கு வரவேற்பு கிடைப்பது இல்லை என்பது போலவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

2019 மற்றும் 2005ம் ஆண்டில் இந்தியா என்று இரு வேறு வீடியோக்களை ஒன்றிணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நம் நாட்டை எங்க கொண்டு போய் நிறுத்தி வச்சுருக்கானுங்கன்னு பாருங்க தேசபக்தாள்ஸ்?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ஏ.ஆர்.ராஜா என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூன் 1ம் தேதி பதிவிட்டுள்ளார். இதைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவில் ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற காட்சி மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் பங்கேற்ற காட்சியை ஒன்றாகச் சேர்த்துப் பதிவிட்டுள்ளனர். நரேந்திர மோடி வரும் போது ஐக்கிய நாடுகள் சபையில் அவருக்கு யாரும் கைதட்டி வரவேற்பு அளிக்கவில்லை. அதே நேரத்தில், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த மன்மோகன் சிங்குக்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

இந்த இரண்டு சம்பவங்களும் எங்கு நடந்தது என்று குறிப்பிடாமல், இரண்டையும் ஒப்பிட்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது உலக நாடுகள் வரவேற்பு அளித்தன, மோடி பிரதமரான பிறகு உலக நாடுகள் வரவேற்பு அளிப்பதில்லை என்பது போன்று பதிவிட்டுள்ளனர். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

2019ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி பங்கேற்ற வீடியோவை தேடி எடுத்தோம். ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் அந்த வீடியோ கிடைத்தது. ஐக்கிய நாடுகள் சபையில் 74வது கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்ததாக மன்மோகன் சிங் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பங்கேற்றுப் பேசிய வீடியோவை தேடி எடுத்தோம். AP Archive என்ற சர்வதேச செய்தி நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் 2005ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐ.நா சபை கூட்டத்தில் இந்தியப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு எப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது என்று பார்த்தோம்.  2013ம் ஆண்டு  மன்மோகன் சிங் ஐநா சபையில் உரையாற்றிய வீடியோ கிடைத்தது. அதில், 2019ம் ஆண்டு மோடிக்கு வழங்கப்பட்டது போன்றே மன்மோகன் சிங்குக்கும் பெரிய அளவில் கைத்தட்டலோ, உற்சாக வரவேற்போ அளிக்கப்படவில்லை. 

அடுத்ததாக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் மோடி பங்கேற்றுப் பேசிய வீடியோவை பார்த்தோம். 2016ம் ஆண்டு PMO India என்ற பிரதமரின் யூடியூப் பக்கத்தில் அந்த வீடியோ நமக்குக் கிடைத்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதில் உள்ள மன்மோகன் சிங் வீடியோவில் உள்ளது போலவே, மோடிக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. 

ஐ.நா சபைக் கூட்டத்தில் நரேந்திர மோடிக்கோ, மன்மோகன் சிங்குக்கோ பெரிய அளவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவில்லை. ஆனால், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இந்தியப் பிரதமராகப் பங்கேற்கச் சென்ற நரேந்திர மோடி மற்றும் மன்மோகன் சிங் இருவருக்கும்  உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வெளிநாட்டில் மன்மோகன் சிங்குக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது பிரதமர் மோடிக்கு வரவேற்பு கிடைப்பது இல்லை என்று பகிரப்படும் பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மன்மோகன் சிங் பெற்றதைப் போல மோடிக்கு வெளிநாடுகளில் வரவேற்பு கிடைப்பதில்லையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context