
இந்தியா (INDIA) என்ற பெயருக்கு ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் பெற்ற நாடு (Independent Nation Declared In August) என்று விரிவாக்கம் உள்ளது என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: threads.net I Archive
இந்தியா என்ற வார்த்தைக்கு என்ன விரிவாக்கம் என்று ஒரு பெண் கேட்கும் வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு ஒருவர் ஆகஸ்ட் மாதம் விடுதலை பெற்ற நாடு (Independent Nation Declared In August) என்று ஒருவர் கூற, அது சரி என்கிறார்.
நிலைத் தகவலில், “‘INDIA’ என்ற வார்த்தைக்கு விரிவாக்கம் என்ன? வெளிநாட்டில கேட்கப்பட்ட கேள்வி இது! நம்ம நாட்டு பயபுள்ளைக யாருக்கும் பதில் தெரியல(அப்பிடி ஒன்னு இருக்கா? கேள்விப்பட்டதே இல்ல).😂 ஆனா பாகிஸ்தான் பாய் பட்டுனு சொல்லிட்டான்.🔥 இதைப்பாத்துட்டு நம்ம சங்கிக என்ன சொல்வானுகளோ!?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பண்டைய காலத்தில் கிரேக்கர்கள், பாரசீகர்கள் சிந்து நதிக்கு கிழக்கே இருப்பவர்களை ஹிந்து என்று அழைத்தனர் . சிந்து (Sindhu) நதியின் பெயரை வைத்து இந்த நாட்டுக்கு இந்தியா என்ற பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது. இந்தியா என்ற சொல்லை பொதுக் காலம் 5ம் நூற்றாண்டில் எரோடோட்டசு (Herodotus) என்ற கிரேக்க வரலாற்றறிஞர் பயன்படுத்தியுள்ளதாக தகவல் நமக்கு கிடைத்தது. உலக வரலாறு என்சைக்கிளோபீடியா இணையதளத்தில் இந்தியா என்ற பெயர் வரலாற்றில் எப்போது எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பட்டியலையே வெளியிட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: worldhistory.org I Archive
இந்தியாவுக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் கிடைத்தது. ஆனால், இந்தியா என்ற பெயர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் இந்தியா என்ற சொல்லைப் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த இங்கிலாந்து நாட்டவர்கள் தொடங்கிய நிறுவனத்தின் பெயர், கிழக்கிந்திய கம்பெனி (The East India Company).
1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கப் போகிறது என்று தெரிந்து 5ம் நூற்றாண்டிலேயே இந்தியா என்ற பெயரை வைத்துவிட்டார்களா என்ன? அடிப்படை புரிதல் இன்றி Independent Nation Declared In August என்பதுதான் INDIA என்ற சொல்லின் விரிவாக்கம் என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மைப் பதிவைக் காண: legislation.gov.uk I Archive
1697ம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்ற இணையதளத்திலிருந்து எடுத்தோம். 16ம் நூற்றாண்டில் இந்தியா என்ற சொல் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இது உறுதி செய்கிறது. அதன் பிறகு இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கு முன்பாக தனியாக இந்திய அரசுச் சட்டத்தை 1935ம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இதுதான் இந்தியர்களுக்கு தன்னாட்சியை அளித்தது. அப்போது கூட 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவுக்கு காந்தியடிகளின் முயற்சியால் சுதந்திரம் கிடைக்கவில்லை, சுபாஷ் சந்திரபோஸின் தீவிர தாக்குதல் நடவடிக்கைக்குப் பயந்து இங்கிலாந்து விடுதலையைக் கொடுத்தது என்று சமூக ஊடகங்களில் தீவிர வலதுசாரிகள் விவாதம் செய்வது உண்டு. சுபாஷ் சந்திர போஸ் ஆரம்பித்த ராணுவத்திற்கு பெயர் இந்திய தேசிய ராணுவம். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு அதாவது 1942ல் இந்த ராணுவத்தை அவர் உருவாக்கினார். ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால் அவர் எதற்காக இந்தியா என்ற பெயரில் ராணுவத்தை அமைத்திருக்க வேண்டும்?
ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் பெற்ற நாடு என்ற தகவல் சில ஆண்டுகளுக்கு முன்பு தீவிர வலதுசாரிகளால் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்ற வேண்டும்… ஏனெனில் இந்தியா என்ற பெயரை பிரிட்டிஷ் நாட்டினர் வைத்தனர் என்று வதந்தி பரப்பப்பட்டது. ஆனால், இந்த தகவல் தவறானது என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். இவை எல்லாம் இந்தியா என்பதற்கு Independent Nation Declared In August (ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் பெற்ற நாடு) என்பது விரிவாக்கம் என்று பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்கின்றது.
முடிவு:
ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட நாடு என்பதன் சுருக்கம் தான் இந்தியா என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
