கற்பழிப்பு வழக்கில் அயோத்தி ராமர் கோவில் பூசாரி கைது செய்யப்பட்டாரா? 

இந்தியா | India குற்றம் | Crime தவறாக வழிநடத்துபவை I Misleading

கடத்தல் மற்றும் கற்பழித்தல் வழக்கில் ராமர் கோவில் பூசாரி கைது என்று அயோத்தி ராமர் புகைப்படத்துடன் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அயோத்தி பால ராமர் விக்ரகம் மற்றும் சாமியார் ஒருவர் புகைப்படத்தை இணைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்கில் ராமர் கோவில் பூசாரி கைது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “#செந்தூர் உடலில் ஓடும் ஓநாய் சங்கி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்! இதுவும் இந்து பெண்ணின் குங்குமத்தை அழிப்பதைப்போல தானே… சங்கி… ரத்தம் இருக்கா…. கொதிக்குதா…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தி ராமர் விக்ரகத்தின் புகைப்படத்துடன் சாமியார் ஒருவரின் புகைப்படத்தை இணைத்து ராமர் கோவில் பூசாரி கைது என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். புகைப்படத்தில் அயோத்தி ராமர் விக்ரகம் இருப்பதால், பதிவைப் பார்க்கும் போது அயோத்தி ராமர் கோவில் பூசாரி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த ராமர் கோவில் ஒன்றின் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்ட சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்தியை அயோத்தி ராமர் புகைப்படத்துடன் தவறாக பகிர்ந்திருக்கலாம் என்பதால் ஆய்வு செய்தோம். இந்த பதிவில் உள்ள சாமியார் புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இது கர்நாடக மாநிலத்தில் நடந்த சம்பவம் தொடர்பான சாமியார் என்பது உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive

இந்த சாமியார் புகைப்படத்துடன் என்டிடிவி உள்ளிட்ட ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில், கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் மேகாலி (Mekhali) என்ற கிராமத்தில் உள்ள ராமர் கோவிலின் அர்ச்சகராக இருந்த லோகேஷ்வர மகாராஜ் என்பவர் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த சம்பவத்திற்கும் அயோத்தி ராமர் கோவிலுக்கும் தொடர்பில்லை என்பது தெளிவானது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தொடர்பாக சமூக ஊடகங்களில் தேடிய போது நீண்ட தகவலுடன் பலரும் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தனர். அதில், “கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தைச் சார்ந்த ராமர் கோவிலின் பூசாரி லோகேஷ்வர மகராஜ் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஆனால், சிலர் அந்த நீண்ட பதிவில் இடம் பெற்ற தகவலை மறைத்து, அயோத்தி ராமர் விக்ரகத்துடன் “ராமர் கோவில் பூசாரி கைது” பதிவிட்டு வருகின்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது… இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதியாகிறது.

முடிவு:

கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த ராமர் கோவில் ஒன்றின் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். இதை அயோத்தி ராமர் புகைப்படத்தை வைத்து அயோத்தி ராமர் கோவில் பூசாரி கைது செய்யப்பட்டது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் தவறாக பதிவு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:கற்பழிப்பு வழக்கில் அயோத்தி ராமர் கோவில் பூசாரி கைது செய்யப்பட்டாரா?

Written By: Chendur Pandian 

Result: Misleading

Leave a Reply