
விசாரணை கைதிகள் விசாரணையின் போது பயத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது இயற்கையானதுதான் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அரசியல் செய்யாதீர். விசாரணை கைதிகள் விசாரணையின் போது; பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது! இதை வைத்து மலிவான அரசியல் செய்வது வெட்க கேடானது.. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக இருந்த அஜித் குமார் போலீஸ் விசாரணையின் போது மரணம் அடைந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி நந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் லாக்அப் மரணங்கள் நடப்பது இயற்கையானதுதான் என்று லாக்அப் மரணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவாக பேசியது போன்று ஒரு நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போது வழக்கமாக நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. அதன் தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக உள்ளது. இதுவே, இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை தெளிவுபடுத்துகிறது.
ஆதாரங்கள் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு எதுவும் வெளியாகவில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை அந்த ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.
அதைத் தொடர்ந்து, இந்த நியூஸ் கார்டு போலியானது “இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிடவில்லை!” என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருப்பதாகத் தகவல் தெரிவித்தார். அந்த பதிவை அவர்களது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து எடுத்தோம். ‘FAKE’ முத்திரையுடன் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று அவர்கள் பதிவிட்டிருந்தனர்.
விசாரணை கைதிகள் விசாரணையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது இயற்கையானது என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக எந்த செய்தியும் இல்லை. ஆனால், “குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தந்து நீதியை நிலைநாட்டுவோம்” என்று அவர் வெளியிட்ட பதிவு உள்ளது. குற்றம்சாட்டப்பட்ட காவலர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நியூஸ் 7 தமிழ் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு போலியானது, தவறானது என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
விசாரணை கைதிகள் பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது என்று ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“விசாரணை கைதிகள் பயத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவது இயற்கை” என்று ஸ்டாலின் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
