
தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தைத் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive
நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழ் பெண்கள் உடன்கட்டை ஏறவேண்டும். உடன்கட்டை ஏறுதல் தமிழர்களின் பாரம்பரியம். தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை ஏறவேண்டும். கணவன் இறந்தபின் பெண் வாழ்வதில் பயன் இல்லை – நாராயணன் திருப்பதி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Jaya Kanagaraja என்ற ட்விட்டர் ஐடி கொண்ட நபர் 2022 ஜூன் 15ம் தேதி இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார். அதில், “டேய் உன் வீட்டு பொம்பளையே உன்ன செருப்பால அடிக்கும் டா…” என்று குறிப்பிட்டுள்ளார். ஃபேஸ்புக்கிலும் பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
உண்மை அறிவோம்:
மிகப்பழமைவாதமான உடன்கட்டை ஏறுதலை இப்போது யாரும் ஆதரிப்பது இல்லை. அப்படியே ஆதரவு அளித்தாலும் பொது வெளியில் பகிரங்கமாக அதைப்பற்றிக் கூறுவது கிடையாது. முகலாய படையெடுப்புக்குப் பிறகுதான் உடன்கட்டை ஏறுதல் பழக்கம் ஏற்பட்டது என்ற வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நாராயணன் திருப்பதி பதிவிட்டிருந்தார். அது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், தமிழ் பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்று நாராயணன் திருப்பதி கூறியதாக ஒரு நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரவே, அது பற்றி ஆய்வு செய்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட், டிசைன் வழக்கமாக நியூஸ் 7 வெளியிடும் நியூஸ் கார்டில் இருப்பது போல இல்லை. எனவே, இது வேண்டுமென்றே போலியாக உருவாக்கிய நியூஸ் கார்டு என்பது தெரிந்தது. அதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

முதலில் இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதா என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். 2022 ஜூன் 15ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை பார்த்தோம். அதில் நாராயணன் திருப்பதி தொடர்பான நியூஸ் கார்டு எதுவும் இல்லை. எனவே, நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார்.
நாராயணன் திருப்பதி இப்படி ஏதும் கருத்தைத் தெரிவித்துள்ளாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். ஆனால் நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இப்படி பதிவு எதையும் வெளியிட்டதாக இல்லை. உடன்கட்டை ஏறுதல் தொடர்பாக அவருடைய பழைய பதிவுகளை பார்த்தோம். 2019ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி அவர் அந்த ட்வீட்டை வெளியிட்டிருந்தார்.
அதில், “முகலாய படையெடுப்புகள் பெண்களை வன்கொடுமையும் பாலியல் வல்லுறவும் செய்ததால், தங்கள் மானத்தைக் காத்துக்கொள்ளப் பெண்கள் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டனர்” என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் பெண்கள் மீண்டும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றோ, தமிழ் பெண்கள் உடன்கட்டை ஏறவேண்டும் என்றோ அவர் கூறவில்லை என்பது உறுதியானது.
இதேபோன்று, தந்தி டிவி லோகோவுடன் ஒரு நியூஸ் கார்டும் பகிரப்படுகிறது. அதுவும் போலியான நியூஸ் கார்டுதான். தந்தி டிவி அதனை வெளியிடவில்லை.
முடிவு:
தமிழ் பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்று பா.ஜ.க-வின் நாராயணன் திருப்பதி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தமிழ்ப் பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
