அஸ்ஸாம் மாநிலத்தில் தனி நாடு கேட்டு போராட்டம் நடத்திய வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பேரணியாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அசாமில், வங்காளதேச மியான் முஸ்லிம்கள் குழு ஒன்று தனி நாடு கோரி பேரணியில் ஈடுபட்டது. மேலும், ‘ஆசாதி’ கோஷங்களையும் எழுப்பினர். உடனடியாக அவருக்கு அசாம் போலீசார் சிகிச்சை அளித்தனர். வங்காளதேச மியான் முஸ்லிம் குழுவில் பெரும்பாலானோர் தலையில்லாத கோழிகளைப் போல ஆசாதி கோஷத்துடன் திரும்பி ஓடினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் வந்த இஸ்லாமியர்கள், இந்தியாவில் தனி நாடு கேட்டுப் போராடியதாகப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டுக் கலவரம் உச்சத்தை அடைந்தது. அங்கு இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தாக்கப்பட்டனர். இந்த சூழலில், மேற்கண்ட தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2017ம் ஆண்டு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற பகுதியின் புகைப்படத்துடன் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தது. அஸ்ஸாமின் கோல்பாராவில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம் இளைஞர் கொல்லப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: newsclick.in I Archive
2017ம் ஆண்டு அஸ்ஸாமின் கோல்பாரா மாவட்டம் (Goalpara District) கர்போஜா (Kharboja) என்ற கிராமத்தைச் சார்ந்த மக்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் டி-வோட்டர் (D voters) என்று முத்திரை குத்தி வைத்துள்ளதாகவும், தங்கள் குடியுரிமையை மாநில அரசு சந்தேகிப்பதாகவும் கூறி போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது அந்த போராட்டத்தைத் தடுத்து நிறுத்திய போலீஸ் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தாங்கள் இந்தியர்கள் என்றும், தங்களை வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியர்கள் என்று அஸ்ஸாம் அரசு தவறாக குற்றம்சாட்டுவதாக கூறி இரண்டு வழக்கறிஞர்கள் தலைமையில் இந்த பேரணி மற்றும் போராட்டம் நடந்தது. அதில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் யாக்கூப் அலி என்ற 22 வயது இளைஞர் கொல்லப்பட்டார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடிய போது யூடியூப், ஃபேஸ்புக்கில் இந்த வீடியோவை ஊடகங்கள் மற்றும் தனி நபர்கள் 2017ம் ஆண்டு பதிவேற்றம் செய்திருந்ததைக் காண முடிந்தது. ஃபேஸ்புக்கில் மிகத் தெளிவான வீடியோ நமக்குக் கிடைத்தது. அதில் அவர்கள் எடுத்து வந்த பேனரும் தெளிவாகத் தெரிந்தது. அதை கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் மொழி பெயர்த்துப் பார்த்தோம்.
அஸ்ஸாம் மொழியிலிருந்த அந்த பேனரில் தங்களை டி-வோட்டர் என்று முத்திரை குத்தியதை எதிர்த்து முற்றுகை போராட்டம் நடத்துவதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும் உண்மையான இந்தியக் குடிமக்களின் பெயரை நீக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தனர். எந்த இடத்திலும் தனி நாடு வேண்டும் என்று அவர்கள் கூறவில்லை. இவை எல்லாம் தனி நாடு கேட்டுப் போராடிய இஸ்லாமியர்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்தன.
முடிவு:
அஸ்ஸாமில் வங்கதேச ஊடுருவல்காரர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் சந்தேகத்துக்குரியவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் அதை எதிர்த்து நடத்திய போராட்டத்தின் வீடியோவை எடுத்து, தனிநாடு கேட்டதாக தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அஸ்ஸாமில் தனி நாடு கேட்டு போராடிய வங்கதேச முஸ்லிம்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
