
அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்து மத அடையாளங்களை வெளிப்படுத்தும் லேசர் காட்சி நீரூற்றை உத்தரப்பிரதேச அரசு அமைத்துள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
லேசர் ஒளி ஒலி காட்சியில் இந்து மத அடையாளங்கள் வெளிப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 18ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “அயோத்தியில் உபி அரசால் நிறுவப்பட்ட நீர் நீரூற்று” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அயோத்தியில் ஜனவரி 22, 2024 அன்று ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அயோத்தியில் அரசு அமைத்துள்ள நீரூற்று என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அயோத்தி தொடர்பாக பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரவே, இந்த தகவல் உண்மையா என்று சரி பார்த்தோம்.
இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அதே வீடியோவை பலரும் 2023 ஜூலை மாதத்தில் இருந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.
2023 ஜூலை 4ம் தேதி பதிவிடப்பட்டிருந்த ஒரு எக்ஸ் தள (ட்விட்டர்) பதிவில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்த வேத் வன் பார்க் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வேத்வன் பார்க் தொடக்கம் என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது டெல்லி அருகே உள்ள நொய்டாவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார் என்றும் தெரியவந்தது.
இந்த பூங்காவை உத்தரப்பிரதேச அரசு அமைத்துள்ளது என்பது உண்மைதான்… ஆனால் இந்த பூங்கா அயோத்தியில் இல்லை. நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள வேத்வன் பூங்காவின் வீடியோவை எடுத்து ராமர் கோவில் திறப்பு விழா சமயத்தில் அயோத்தியில் அமைக்கப்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அயோத்தியில் திறக்கப்பட்டுள்ள இந்து மத அடையாள நீரூற்று என்று பரவும் வீடியோ நொய்டாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அயோத்தியில் அமைக்கப்பட்ட நீரூற்று என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: Partly False
