
மோடியை தோற்கடிப்பதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டேன் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஊடகங்களில் வெளியாகும் பிரேக்கிங் நியூஸ் கார்டு போன்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மோடியை பிரதமராக்க நான்தான் மிகப்பெரிய முயற்சிகளில் ஈடுபட்டேன். இப்போது நானே அவரைத் தோற்கடிப்பதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டேன். நான் நினைத்தால் பாஜகவை முகவரியே இல்லாமல் செய்துவிடுவேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. ஆந்திராவின் தெலுங்கு தேசம், பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் கூட்டணியில் பிரச்னை ஏற்பட்டது போலவும், நரேந்திர மோடியை தோற்கடிப்பதற்கான வேலையைத் தொடங்கிவிட்டேன் என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரப்பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு கூறியது போன்று ஒரு தகவலை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஊடகத்தின் பெயர் இன்றி, தனி நபர் யாரோ ஒருவர் உருவாக்கிய நியூஸ் கார்டை பலரும் பகிர்ந்து வரவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நியூஸ் கார்டில் உள்ள தகவலை அப்படியே டைப் செய்து, கூகுளில் பதிவிட்டுத் தேடினோம். அப்படி சந்திரபாபு நாயுடு பேசியதாக எந்த செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. அதை அப்படியே ஃபேஸ்புக்கில் பதிவிட்டு தேடிய போது, 2018ம் ஆண்டில் இந்த நியூஸ் கார்டை பலரும் வைரலாக பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. 2018ம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது. நரேந்திர மோடி மற்றும் பாஜக-வுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு ஆவேசமாகப் பேசிய காலம் அது.
உண்மைப் பதிவைக் காண: indiatimes.com I Archive I deccanchronicle.com I Archive
பாஜக-வை அழித்துவிடுவேன் என்றெல்லாம் 2018, 2019ம் ஆண்டில் சந்திரபாபு நாயுடு பேசியது தொடர்பான செய்திகள் நமக்குக் கிடைத்தன. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்ற செய்தி கிடைக்கவில்லை. அதில் தேதியும் குறிப்பிடப்படவில்லை. எனவே, எப்போது அவர் இப்படிப் பேசினார் என்பதைக் கண்டறியவும் முடியாமல் போனது.
நம்முடைய ஆய்வில் இந்த நியூஸ் கார்டு 2018ம் ஆண்டிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2018ல் பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் விலகியதைத் தொடர்ந்து பாஜக-வை மோடியை விமர்சித்து சந்திரபாபு நாயுடு பேசியது உண்மைதான். ஆனால், 2024 தேர்தலில் பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் மீண்டும் இணைந்துவிட்டது.
தற்போது மத்திய அரசு செயல்பட தெலுங்கு தேசத்தின் ஆதரவு மிக முக்கியமானதாக உள்ளது. இந்த சூழலில் பழைய நியூஸ் கார்டை பரப்பி கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது போன்ற வதந்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது.
இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2018ம் ஆண்டில் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறிய போது சந்திரபாபு நாயுடு பேசியதை வைத்து உருவாக்கப்பட்ட நியூஸ் கார்டை 2025ல் இப்போது பேசியது போன்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:மோடியை தோற்கடிக்கும் வேலையைத் தொடங்கிவிட்டேன் என்று சந்திரபாபு நாயுடு கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
