
தி.மு.க ஆட்சியில் கருணாநிதி நினைவாக கடலில் பேனா சிலை அமைக்க முடிகிறது, ஆனால் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வழியில்லை என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தானிய மூட்டை மழை – வெயிலில் சேதம் அடைந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கடலில் எழுதாத பேனா வைக்க காசு இருக்கு , கருணாநிதி பேரில் சதுக்கம் அமைக்க காசு இருக்கு . கருணாநிதிக்கு கோட்டம் அமைக்க காசு இருக்கு , நெல் வைக்க கட்டிடம் கட்டுவதற்கு காசு இல்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்பட பதிவை எங்கள் இந்தியா என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஆகஸ்ட் 8ம் தேதி பதிவிட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கருணாநிதி நினைவாக கடலில் பேனா சின்னம் அமைக்க நிதி உள்ளது, கலைஞர் கோட்டம் அமைக்க நிதி உள்ளது ஆனால் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசிடம் நிதி இல்லை என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். கருணாநிதி நினைவு பேனா சின்னம் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படுகிறது. கலைஞர் கோட்டம் தமிழ்நாடு அரசால் கட்டப்படவில்லை. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தயாளு அம்மாள் அறக்கட்டளை என்பது தனியாருக்கு சொந்தமானதாகும்.
தமிழ்நாட்டில் ஒரு மூட்டை நெல் கூட சேதமாகாத வகையில் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுவிட்டதா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. இந்த புகைப்படம் 2021 மே மாதத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதுதானா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 2012ம் ஆண்டில் இருந்து இந்த புகைப்படம் செய்தி ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.
businesstoday.in என்ற இணையதளத்தில் இந்த புகைப்படம் 2012ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலையும் வெளியிடவில்லை.

உண்மைப் பதிவைக் காண: livemint.com I Archive 1 I hindustantimes.com I Archive 2 I blogspot.com I Archive 3
livemint.com என்ற இணையதளத்தில் இந்த புகைப்படம் 2014ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டிருந்தது. அதிலும் எந்த தகவலும் இல்லை. 2015ல் இதே படத்தை அந்த ஊடகம் பயன்படுத்தியிருந்தது. அதில், இந்த புகைப்படம் ஹாப்பூர் (Hapur) என்ற இடத்தில் உள்ள இந்திய உணவுக் கழகத்தில் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
(IFC) எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஹாப்பூர் எங்கே உள்ளது என்று தேடிப் பார்த்த போது அது உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருப்பது தெரிந்தது.
மின்ட் இணையத்தில் இந்த புகைப்படம் இந்துஸ்தான் டைம்ஸ்-ஆல் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இந்துஸ்தான் டைம்ஸ்-ல் இந்த புகைப்படத்தை தேடினோம். குறிப்பிட்ட செய்தி நமக்கு கிடைத்தது. ஆனால் அதில் உள்ள புகைப்படம் நமக்கு ஓப்பன் ஆகவில்லை. ஆனால், இந்துஸ்தான் டைம்ஸ்ல் வெளியான செய்தியை அப்போதே சிலர் தங்கள் பிளாக்ஸ்பாட்டில் வெளியிட்டிருப்பது நமக்கு கிடைத்தது. இவை எல்லாம் இந்த புகைப்படம் தமிழ்நாட்டைச் சார்ந்ததும் இல்லை. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டதும் இல்லை என்பதை உறுதி செய்தன.
இந்திய உணவுக் கழகம் என்பது இந்திய அரசுக்கு சொந்தமானது. அதற்கும் தமிழ்நாடு அரசுக்கும் தொடர்பு இல்லை. இந்திய உணவுக் கழக கிடங்கின் அதுவும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்திய உணவுக் கழக கிடங்கின் புகைப்படத்தை எடுத்து வந்து தமிழ்நாட்டில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க வழியில்லை என்று தவறாக பகிர்ந்திருப்பதைத் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்திய அரசின் உணவு கழகத்தில் 2012ம் ஆண்டில் எடுக்கப்பட்ட படதத்தை வைத்து திமுக ஆட்சியில் நெல் மூட்டைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று விஷமத்தனமாக பகிர்ந்திருப்பதை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:‘திமுக ஆட்சியில் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வழியில்லை’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: False
