
ஹரியானாவில் தடுத்து நிறுத்திப்பட்ட விவசாயிகளின் பேரணி படம் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “புதிய விவசாய மசோதாவை கண்டித்து ஹர்யானாவில் விவசாயிகள் மாபெரும் போராட்டம், தண்ணீரை பாய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் போலிசார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை சற்று முன் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 நவம்பர் 26ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மத்திய அரசு சமீபத்தில் இயற்றிய வேளாண் சட்டங்களை கண்டித்து ஆறு மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி நடத்தினர். 2020 நவம்பர் 26ம் தேதி இரவில் டெல்லி நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் ஹரியானாவின் சோனிபட்டில் தடுத்து நிறுத்தப்பட்டது சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவை ஆய்வு செய்தோம். தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் முதல் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

அசல் பதிவைக் காண: thehindu.com I Archive
அந்த படம் 2018ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தி இந்து நாளிதழில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிந்தது. விவசாயிகளின் பேரணி தலைநகரில் வன்முறையில் முடிந்தது என்று செய்தி வெளியிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த புகைப்படம் பழைய படம் என்பது உறுதியானது.
இரண்டாவது விவசாயிகள் கோஷம் எழுப்புவது போன்ற படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 2020 நவம்பர் 6, 7ம் தேதி இந்த படத்தை பல முன்னணி ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. அதில் பதிந்தாவில் நடந்த விவசாயிகள் பேரணி என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் இந்த படத்தை எடுத்தது பி.டி.ஐ என்றும் குறிப்பிட்டிருந்தனர். எனவே, பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் படத்தை தேடினோம். அதில் 2020 நவம்பர் 5ம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: ptinews.com I Archive 1 I deccanherald.com I Archive 2
மூன்றாவதாக பேரணி தடுத்து நிறுத்தப்படும் படம் எப்போது எடுக்கப்பட்டது என்று பார்த்தோம். அதுவும் 2018ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி டெல்லியில் எடுக்கப்பட்ட படம் என்பது தெரிந்தது. இந்தியா டிவி என்ற ஊடகம் இந்த படத்தை 2018ம் ஆண்டு வெளியிட்டிருப்பது தெரிந்தது. அவர்கள் மட்டுமின்றி வேறு பல ஊடகங்களும் இந்த படங்களை 2018ம் ஆண்டு வெளியிட்டிருந்தன.

அசல் பதிவைக் காண: indiatvnews.com I Archive
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் சட்டம் நிறைவேற்றப்படும் போது பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போதும் கூட இது போன்று பழைய படங்கள் வைரல் ஆக்கப்பட்டன. அப்படி வெளியான ஒரு படத்தை ஏற்கனவே, ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் ஆய்வு செய்திருந்தது.
நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் 2018ம் ஆண்டு டெல்லியில் நடத்திய பேரணி உள்ளிட்ட பழைய படங்களை தற்போது நடந்தது போல பதிவிட்டு வருவது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் 2020 நவம்பரில் நடந்த விவசாயிகள் பேரணி படங்கள் இவை இல்லை என்பது உறுதி செய்யப்படுகின்றன.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தை 2020 விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி தகவல் வெளியிட்டிருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஹரியானாவில் பேரணி சென்ற விவசாயிகளை விரட்டிய போலீஸ்- பழைய புகைப்படங்கள்!
Fact Check By: Chendur PandianResult: False
