
பாகிஸ்தானின் பாலகோடில் இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று அந்நாட்டின் முன்னாள் தூதர் தெரிவித்தார் என்று செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழக பா.ஜக இளைஞரணி வெளியிட்ட பிரதமர் மோடியின் புகைப்படம், டைம்ஸ் நவ் பத்திரிகையில் வெளியான செய்தியின் படம் ஆகியவற்றைக் கொண்டு புகைப்பட பதிவு ஒன்று தயாரிக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் மோடி அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதில் 300 பயங்கரவாதிகள் பலியானது உண்மைதான் – பாகிஸ்தான் தூதர் ஒப்புதல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை SivaBalan. R என்பவர் 2021 ஜனவரி 10 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வந்த வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் இதை மறுத்து வருகிறது. உயிரிழப்பு நிகழவில்லை என்று அது சாதித்து வருகிறது.
அவ்வப்போது உயிரிழப்பு பற்றி பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுவிட்டது என்று இந்தியாவில் செய்தி பரவுவதும், அதை பாகிஸ்தான் மறுப்பதும் தொடர்கதையாக உள்ளது. 2019ம் ஆண்டு மார்ச் மாதம் இது தொடர்பாக பிபிசி ஒரு உண்மை கண்டறியும் கட்டுரையே வெளியிட்டுள்ளது.
அசல் பதிவைக் காண: bbc.com I Archive
இந்த நிலையில் முன்னாள் தூதர் ஒருவர் பாலகோட் தாக்குதல் உயிரிழப்பை ஒப்புக்கொண்டார் என ஒரு தகவல் செய்தி ஊடகங்களில் வெளியானது. ஏ.என்.ஐ உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள், தேசிய ஊடகங்கள் அனைத்தும் இதை வெளியிட்டன. அதன் அடிப்படையில் தமிழ் ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டன.

அசல் பதிவைக் காண: zeenews.india.com I Archive
ஆனால், ஜாஃபர் ஹிலாலி என்ற அந்த முன்னாள் தூதர், அவ்வாறு நான் கூறவே இல்லை, என்று மறுப்பு தெரிவிக்கவே பரபரப்பு ஏற்பட்டது. அவர் வெளியிட்ட ட்வீட்களில், “ஹம் தொலைக்காட்சியில் நான் பேசியதன் எடிட் செய்யப்பட்ட, வெட்டி ஒட்டப்பட்ட வீடியோவை ஆதாரமாகக் கொண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. பாலகோட் தாக்குதல் தொடர்பாக முதல் நிலை ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில், மோடி தன்னுடைய பொய்யை உறுதியாக்க மூன்றாம் நிலை தரவுகளை நாடுகிறார். எதையும் கண்டுபிடிக்கவில்லை. அதை உருவாக்க பயங்கரமான செயலை செய்கிறார்” என்று கூறியிருந்தார்.
பாலகோட் தாக்குதல் உண்மையானது என்பதை நிரூபிக்க இந்திய அரசு எந்த அளவுக்கு சென்றுள்ளது, அதை நிரூபிக்க முடியாமல் மோடி எந்த அளவுக்கு தவித்து வருகிறார் என்று இந்திய அரசையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து தொடர்ந்து அவர் சில பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
மேலும், ஹம் என்ற பாகிஸ்தான் தொலைக்காட்சியில் தான் பேசியதன் முழு வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார். 2020 டிசம்பர் 23ம் தேதி அந்த வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்தனர்.
அந்த வீடியோவில் பிரச்னைக்குரிய கருத்து வரும் பகுதியில் என்ன சொல்கிறார் என்று உருது, இந்தி தெரிந்த நண்பர்களிடம் கேட்டோம். முழுவதையும் கேட்டுவிட்டு 4.30வது நிமிடத்தில் இருந்து அவர் பாலகோட் தொடர்பான பேசியது வருகிறது. அவர் பேசும் போது, “சர்வதேச எல்லையைத் தாண்டி வந்து இந்தியா போர் குற்றத்தில் ஈடுபட்டது. அவர்களின் நோக்கம் 300 குழந்தைகள் படித்து வந்த மதராசா மீது தாக்குதல் நடத்துவதுதான். அதாவது 300 பேரை கொலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. இந்தியா குண்டு வீசியது காலி கால்பந்து மைதானத்தின் மீதுதான்” என்று கூறியதாக தெரிவித்தனர். மேலும், இந்தியா நடத்திய தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் உயிரிழந்தார்கள் என்று அவர் கூறவில்லை என்றனர்.
இந்த செய்தியை முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட போதே ஆல்ட் நியூஸ் என்ற ஃபேக்ட் செக் ஊடகம் உண்மை கண்டறியும் ஆய்வை வெளியிட்டிருந்தது. இதன் பிறகு ஏ.என்.ஐ செய்தி ஊடகம் தான் வெளியிட்ட செய்தி, சமூக ஊடக பதிவை நீக்கிவிட்டது. பல ஊடகங்கள் இன்னும் நீக்கவில்லை. உண்மையை விட பொய்யே மிக வேகமாக பரவுகிறது. அந்த வகையில் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இந்த தவறான செய்தி பகிரப்பட்டு வருகிறது.
தமிழில் இந்த செய்தியை பல ஊடகங்களும் வெளியிட்டன. ஆனால், விகடன் போன்ற ஒரு சில ஊடகங்கள் மட்டுமே தங்கள் தவற்றைத் திருத்திக் கொண்டன. பல ஊடகங்களில் தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் அதிகாரி ஒப்புக்கொண்டார் என்றே உள்ளது.
நம்முடைய ஆய்வில்,
இந்தியா நடத்திய பாலகோட் தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று நான் கூறவில்லை, இந்திய ஊடகங்கள் தவறான தகவரை பரப்பி வருகின்றன என்று பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஜாஃபர் ஹிலாலி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவுகள் நமக்குக் கிடைத்துள்ளன.
பாகிஸ்தானின் ஹம் தொலைக்காட்சியில் ஜாஃபர் பேசியதன் முழு வீடியோ நமக்குக் கிடைத்துள்ளது. அதில், 300 பேரை கொல்ல இந்தியா விரும்பியது என்றே அவர் கூறியதும் உறுதியாகி உள்ளது.
இதன் அடிப்படையில், பாலகோட் தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் தூதர் ஒப்புக்கொண்டார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பாலகோட் விமானப்படை தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் உயிரிழந்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது என்று வெளியான தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பாலகோட் தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் இறந்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
