
திருப்பரங்குன்றத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணியின் செயல்பாட்டைக் கண்டிக்காத தலைவர்கள் என்று புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
விஜய், அன்புமணி, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புகைப்படங்களுடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வாய் திறக்காதவர்கள்! திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி அமைப்பின் கலவர சூழ்ச்சியை கண்டிக்காத அரசியல் தலைவர்கள்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்திற்குப் பதில், மலை உச்சியில் உள்ள தர்காவுக்கு அருகே தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோரிக்கை விடுக்கப்பட்ட இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதை காரணம் காட்டி வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனால் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கருத்துக்களை வெளியிடாத தலைவர்கள் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அன்புமணி ராமதாஸ், நடிகர் விஜய் உள்ளிட்ட தலைவர்களை குற்றம்சாட்டி புதிய தலைமுறையில் செய்தி வெளியிட்டது போன்று பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
புதிய தலைமுறையில் வெளியான பதிவுகளைப் பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று ஆனால் தலைவர்கள் படம் இல்லாமல் பதிவு ஒன்று வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. அதில், “விசாரணை தொடக்கம். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெரியவந்தது.

சில சமூக ஊடக பதிவுகளில் இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டுவிட்டு, பின்னர் அகற்றிவிட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி, இதை புதிய தலைமுறை வெளியிட்டுவிட்டு பின்னர் நீக்கியதா என்று கேட்டோம். அதற்கு அவர், இதை புதிய தலைமுறை வெளியிடவே இல்லை. இது போலியானது என்று உறுதி செய்தார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மேலும், சில நிமிடங்களில் இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை. இது போலியான நியூஸ் கார்டு என்று ஃபேஸ்புக்கில் பதிவை வெளியிட்டுவிட்டு, அது தொடர்பான தகவலையும் நம்மிடம் தெரிவித்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
திருப்பரங்குன்றம் சம்பவம் தொடர்பாக வாய் திறக்காத தலைவர்கள் என்று புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டது என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:“பாஜக-வின் கலவர சூழ்ச்சியை கண்டிக்காத தலைவர்கள்” என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


