
சாவர்க்கர் பறந்து சென்ற புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கறிக்கடைக்காரரிடம் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் தகராறு செய்தார் என நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக நிர்வாகி கைது. சாவர்க்கர் பறந்து சென்ற புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி காடை, கோழி கறி விற்கும் கடையில் தகராறு செய்த பாஜக நிர்வாகியை பொதுமக்கள் அடைத்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நியூஸ் கார்டை மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஆகஸ்ட் 31ம் தேதி பதிவிட்டிருந்தது. இதை ஏராளமானவர்கள் ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:
சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, புல் புல் பறவை இறக்கையில் அமர்ந்து பறந்தார் என்று கர்நாடக பாட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில், சாவர்க்கர், புல்புல் பறவையை மையமாக வைத்து பலரும் பா.ஜ.க-வினரை கிண்டல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த போலியான நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டிருக்கலாம்.
இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. மேலும் அதில், ஏப்ரல் 8, 2022 என்று தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. சாவர்க்கர், புல்புல் விவகாரம் 2022 ஆகஸ்ட் இறுதியில்தான் கிளம்பியது. பழைய நியூஸ் கார்டை வைத்து நையாண்டிக்காக இந்த பதிவை யாரோ உருவாக்கியுள்ளனர். அதை நையாண்டிக்காகப் பலரும் பகிரத் தொடங்கியுள்ளனர்.
இந்த நியூஸ் கார்டு உண்மையானது என்று கருதி பலரும் பா.ஜ.க-வினரை விமர்சித்து வருவதைக் காண முடிந்தது. எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
இப்படி ஒரு சம்பவம் எங்கும் நடந்துள்ளதா என்று நமக்கு எந்த செய்தியும் கிடைக்கவில்லை. புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு இது பற்றிக் கேட்டோம். அவர்களும் இது போலியானது என்று உறுதி செய்தனர்.
இந்த படத்தில் இருக்கும் நபர் யார் என்று அறிய தொடர்ந்து தேடிப் பார்த்தோம். படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை 2022 ஏப்ரல் 8ம் தேதி வெளியிட்டிருந்தது தெரிந்தது. ஆனால் அதில், முதல்வர் குறித்து அவதூறு – பாஜக நிர்வாகி கைது. முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கன்னியாகுமரி மாவட்ட பாஜக பிரசார அணி தலைவர் ஜெயபிரகாஷ் கைது” என்று இருந்தது.
இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
புல்புல் பறவை விற்பனை செய்யப்படுவதாக கூறி காடை, கோழிக்கறிக் கடையில் தகராறில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி கைது என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:புல்புல் இறைச்சி விற்ற கடைக்காரரிடம் பா.ஜ.க நிர்வாகி தகராறு செய்தார் என்று பரவும் போலியான செய்தி!
Fact Check By: Chendur PandianResult: False
