
பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பிய மாணவி அமுல்யா லியோனா இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியை சந்தித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியுடன் இளம் பெண் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து வீடியோ பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஓவைசி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அமுல்யா என்ற பெண் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பிய வீடியோ காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தான் வாழ்க கோஷமிட்ட தேசவிரோதியுடன் ஜோக்கர் பப்பு. நாட்டுக்கு எது தேவையில்லையோ அதை கட்டிபிடித்துக்கொள்வது காங்கிரஸ் வழக்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை பாலப்பள்ளி பாலமுருகன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 செப்டம்பர் 24ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைப்பயணத்தைக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் தொடங்கி தற்போது கேரளாவில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு கட்சியினர், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சூழலில் இந்திய ஒற்றுமை பயணத்தை விமர்சித்து சமூக ஊடகங்களில் வதந்தியும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் ஓவைஸி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் “பாகிஸ்தான் வாழ்க” என்று கோஷம் எழுப்பி சர்ச்சையில் சிக்கியவர் கர்நாடகாவைச் சேர்ந்த அமுல்யா லியோனா. இவர், இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். நடைப்பயணம் செய்யும் ராகுலுடன் பலரும் புகைப்படம் எடுத்து வருகின்றனர். யார் அவர்கள் என்று ஒவ்வொருவராக விசாரித்து ராகுல் காந்தியால் புகைப்படம் எடுக்க முடியாது. அப்படி இருக்கும் போது ராகுல் காந்தியே அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டது போன்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Instagram
இந்த பெண் யார் என்று ஆய்வு செய்தோம். புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, இந்த புகைப்படத்துடன் கூடிய இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று நமக்கு கிடைத்தது. அதில் ராகுல் காந்தியுடன் மகிழ்ச்சியான தருணம் என்று அந்த பெண் இன்ஸ்டாகிராம் பதிவிட்டிருப்பது தெரிந்தது. அந்த பெண் யார் என்று ஆய்வு செய்தோம்.
அந்த பெண்ணின் பெயர் Miva Andreleo. அவர் கேரள மாணவர் சங்கத்தின் நிர்வாகி. நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் உதவியுடன் அந்த பெண்ணைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், “கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் பலரிவட்டம் (Palarivattom) என்ற பகுதிக்கு இந்திய ஒற்றுமை பயணம் வந்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. ராகுல் காந்தியுடன் நான் நடந்த காட்சிகள் வீடியோவாகவும் எடுக்கப்பட்டது. ராகுல் காந்தியுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பகிர்ந்து வருகின்றனர்” என்று கூறியதாக தெரிவித்தனர்.

அமுல்யாவின் சமூக ஊடக பக்கங்களை பார்வையிட்டோம். அவர் ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக எந்த பதிவையும் வெளியிடவில்லை. இதன் மூலம் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷமிட்ட பெண்ணுடன் ராகுல் காந்தி புகைப்படம் எடுத்தார் என்று பகிரப்படும் படம் தவறானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பிய மாணவி இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்தார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட அமுல்யாவுடன் ராகுல் போட்டோ எடுத்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
