‘சிஎஸ்கே ரசிகரை தாக்கிய ஆர்சிபி ரசிகர்கள்’ என்று பரவும் பழைய வீடியோவால் சர்ச்சை… 

சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu விளையாட்டு

‘’சிஎஸ்கே ரசிகரை தாக்கிய ஆர்சிபி ரசிகர்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ விராட் கோலி விதைத்த விதை  மட்டமான RCB ரசிகர்கள்.. கண்டிப்பாக ஆர் சி பீஈஈஈஈஈஈஈஈஈஈக்கு இல்லை கப்பு….,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

Claim Link l Archived Link 

உண்மை அறிவோம்:

2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை சிஎஸ்கே இழந்தது. மேலும், இந்த போட்டி முடிந்ததும், சிஎஸ்கே ரசிகர்களை ஆர்சிபி ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு கேலி கிண்டல் செய்வது போலவும், தரக்குறைவாகப் பேசி வம்பிழுப்பது போலவும் ஏராளமான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இதனால், ஆர்சிபி மற்றும் விராட் கோலியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதில் ஒன்றாகக் குறிப்பிட்டு, மேற்கண்ட வீடியோவை சிலர் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இதற்கும், சமீபத்திய சிஎஸ்கே, ஆர்சிபி போட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

இந்த சிஎஸ்கே ரசிகர் தாக்கப்படும் வீடியா கடந்த 2018ம் ஆண்டு சென்னையில் எடுக்கப்பட்டதாகும். 

The News Minute l crictracker link

கடந்த 2018ம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால், மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே மாதம், சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகளை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. 

ஆனால், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும், என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது. இதன்படி, சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியை தடுத்து நிறுத்துவதற்காக, நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சேப்பாக்கம் பகுதியை முற்றுகையிட்டனர். அப்போது போராட்டக்காரர்களில் சிலர், கிரிக்கெட் ரசிகர்களைத் தாக்கினர். 

குறிப்பாக, சிஎஸ்கே மற்றும் எம்.எஸ்.தோனியின் ரசிகரான சரவணன் ஹரி என்பவர் தாக்கப்பட்ட வீடியோவை எடுத்தே, பெங்களூருவில் நிகழ்ந்ததைப் போல தவறாகப் பரப்புகின்றனர். சரவணன் ஹரி, எங்கெல்லாம் சிஎஸ்கே அணி விளையாடுகிறதோ அங்கு தோனி போன்று வேடமணிந்து சென்று போட்டியை காண்பது வழக்கம். 

எனவே, 2018ம் ஆண்டு சென்னையில் எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது பகிர்ந்து, ஆர்சிபி ரசிகர்கள் மீது சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:‘சிஎஸ்கே ரசிகரை தாக்கிய ஆர்சிபி ரசிகர்கள்’ என்று பரவும் பழைய வீடியோவால் சர்ச்சை…

Fact Check By: Fact Crescendo Team 

Result: False