‘விநாயகர் சிலையை கைது செய்த கர்நாடகா போலீஸ்’ என்ற தகவல் உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political சமூக ஊடகம் | Social தேசிய அளவில் I National

‘’கர்நாடகாவில் விநாயகர் ஊர்வலத்தை தடுத்து, சிலையை கைது செய்த போலீஸ்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த பதிவில் ‘’காங்கிரஸ் இந்து விரோத கட்சி என்பதற்கு இது மற்றொரு சான்று. விநாயகர் சிலையை கர்நாடக காங்கிரஸ் அரசு போலீசார் கைது செய்தனர். உச்சத்தில் கொடூரம்!’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனுடன் போலீசார் விநாயகர் சிலையை பறிமுதல் செய்து, வேனில் ஏற்றுவது போன்ற சில புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படங்களை நாம் கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது நமக்கு timesofindia வெளியிட்ட ஒரு செய்தி ஆதாரம் கிடைத்தது.

செப்டம்பர் 13, 2024 தேதியிட்ட அந்த செய்தியில், ‘’பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற போராட்டக்காரர்கள் சமீபத்திய மண்டியா கலவரம் தொடர்பாக, NIA விசாரிக்க வேண்டும், என வலியுறுத்தினர். அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது, போராட்டக்காரர்கள் ஒரு விநாயகர் சிலையை பாதுகாப்பு அரணாக முன்வைத்தனர். உடனே சிலையை அவர்களிடமிருந்து, மீட்ட போலீசார் தங்களது வேனில் பாதுகாப்பாக ஏற்றினர். அந்த புகைப்படம்தான் இது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Timesofindia Article Link

இதன் அடிப்படையில் நாம் கூடுதல் தகவல் தேடினோம். அப்போது, கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டத்தில் உள்ள நாகமங்களாவில் விநாயகர் சதுர்த்தி முடிந்ததும், கலவரம் ஏற்பட்டதாக, செய்திகள் கிடைத்தன.

ANI News l The Hindu l Indian Express

இந்த கலவரம் நடந்ததும், இதுபற்றி NIA விசாரிக்க வேண்டும், என வலியுறுத்தி பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் அனுமதியின்றி இந்துத்துவ ஆதரவாளர்கள் போராட்டம் செய்தனர். தங்களுடன் விநாயகர் சிலை ஒன்றையும் அவர்கள் கொண்டுவந்தனர். அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தியபோது, அந்த விநாயகர் சிலை கேட்பாரற்று கிடந்தது. எனவே, அதனை மீட்ட போலீசார் தகுந்த பாதுகாப்புடன் உரிய முறையில் நீரில் கரைத்தனர்.

Hindustan Times Link 1 l Link 2

மேலும், இதுபற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம், என்று பெங்களூரு போலீசார் X வலைதளம் மூலமாக, விளக்கம் அளித்தும் உள்ளனர். 

இதன் அடிப்படையில், பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை போலீசார் தடுத்தனர், என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:‘விநாயகர் சிலையை கைது செய்த கர்நாடகா போலீஸ்’ என்ற தகவல் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: MISLEADING