‘’பதநீர் குடித்ததற்கு பணம் கேட்டபோது, இந்த பனை மரத்தை நட்டதே நான்தான்,’’ என்று சீமான் கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சீமான் பதநீர் அருந்தும் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "குடித்த பதநீருக்கு பணம் கேட்டதற்கு இந்த பனை மரத்தை நட்டதே நான்தான் என பதில் கூறிய சீமான்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை ஆபீஸ் ரூம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 மே 18ம் தேதி வெளியிட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் தூத்துக்குடிக்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பதநீர் அருந்திய காட்சி சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில் பதநீருக்கு பணம் கேட்டதற்கு, அந்த பனை மரத்தை வைத்ததே நான்தான் என்று சீமான் கூறினார் என்று குறிப்பிட்டு புதிய தலைமுறை நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் இருப்பது போல இல்லை. உண்மையில் சீமான் அவ்வாறு கூறியிருந்தால் அது பற்றி செய்தி வெளியாகி இருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை. அதே நேரத்தில் சீமான் பதநீர் அருந்திய வீடியோவும் கிடைத்தது. அதில் இந்த பனை மரத்தை நட்டதே நான்தான் என்று சீமான் கூறவில்லை. இவை எல்லாம் இது போலியானது என்பதை உறுதி செய்கின்றன.

முதலில் மே 17, 2023 அன்று புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று ஒரு நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டிருந்தது தெரிந்தது. ஆனால் அதில், "தூத்துக்குடி: பனை ஓலையில் பதநீர் அருந்திய நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்திருப்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: Facebook

இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்துகொள்ள, இதை புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளருக்கு வாட்ஸ் அப்-ல் அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று நம்மிடம் உறுதி செய்தார். இதன் அடிப்படையில் குடித்த பதநீருக்கு பணம் கேட்டதற்கு சீமான் தர மறுத்தார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பதநீருக்கு பணம் தர மறுத்த சீமான் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பதநீருக்கு பணம் தர மறுத்தாரா சீமான்?

Written By: Chendur Pandian

Result: False