
‘’நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் என்பதால் உடனே தண்டிக்கப்பட்டுவிட்டனர்,’’ என்று திருமுருகன் காந்தி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இது உண்மையா என ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link | Archived Link |
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’திருமுருகன் காந்தி, நிர்பயா பலாத்கார வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள், எனவேதான் அவர்களுக்கு உடனே தண்டனை விதிக்கப்பட்டது,’’ என்று கூறி ட்விட்டரில் பதிவு வெளியிட்டதாக, ஸ்கிரின்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ளது போல உண்மையில் திருமுருகன் காந்தி ட்விட்டரில் எதுவும் கருத்து கூறியுள்ளாரா என்று தகவல் தேடினோம்.
ஆனால், இதுபற்றி அவர் எதுவும் கருத்து கூறியதாக தகவல் கிடைக்கவில்லை. கொரோனா வைரஸ் உள்ளிட்டவை பற்றி அவர் கருத்து கூறியதை காண முடிந்தது. இதையடுத்து, சந்தேகத்தை உறுதி செய்துகொள்ள நேரடியாக, திருமுருகன் காந்தியிடமே பேச தீர்மானித்தோம்.
இதன்படி, அவரை நமது குழுவினர் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு விளக்கம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த திருமுருகன் காந்தி, ‘’இப்படி நான் எங்கேயும் ட்வீட் வெளியிடவில்லை. நிர்பயா விவகாரத்தில் நான் சொல்லாததை சொன்னதாக தகவல் பரப்பியுள்ளனர். இதுபோல நிறைய வதந்திகள் என் பெயரில் பகிரப்படுகின்றன. இவற்றில் உண்மையில்லை,’’ என்றார்.
எனவே, திருமுருகன் காந்தியை அரசியல் ரீதியாக பழிதீர்க்கும் வகையில் இப்படியான வதந்தியை உருவாக்கி சிலர் பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது. இதனை அவரே நேரடியாக மறுத்துவிட்டார்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இடதுசாரிகள் என்பதால் நிர்பயா குற்றவாளிகள் உடனே தண்டிக்கப்பட்டனரா?
Fact Check By: Pankaj IyerResult: False
