‘விடுதலைக்காகப் போராடியது ஆர்.எஸ்.எஸ்’ என்று சீமான் கூறியதாக பரவும் செய்தி உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

விடுதலைக்காகப் போராடிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சீமான், சாவர்க்கர் புகைப்படங்களுடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விடுதலைக்காக போராடியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம்! இந்தியாவின் விடுதலைக்காக போராடியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஆனால், சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அறிவித்தவர் பெரியார் அவரை நாங்கள் அம்பலப்படுத்த வேண்டாமா? – நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தகவலின் விவரம்:

தந்தை பெரியாருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகப் பேசி வருகிறார். பெரியார் கூறாத கருத்தை எல்லாம் அவர் கூறினார் என்று சீமான் ஆவேசமாகப் பேசி வருகிறார். இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு ஆதரவாக சீமான் பேசியதாக நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.

இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போதே எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும் இதையும் உண்மை என்று நம்பி பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக், எக்ஸ் தள பக்கங்களைப் பார்வையிட்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் ஜனவரி 28, 2025 அன்று வெளியானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஜனவரி 28ம் தேதி புதிய தலைமுறை அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது.

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். இது போலியாக உருவாக்கப்பட்டது என்று நம்மிடம் அவர் தெரிவித்தார். மேலும், இதை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று அவர்கள் இணையதளத்தில் வெளியிட்ட மறுப்பு நியூஸ் கார்டின் இணைப்பையும் நமக்கு அனுப்பினார். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

விடுதலைக்காக போராடிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:‘விடுதலைக்காகப் போராடியது ஆர்.எஸ்.எஸ்’ என்று சீமான் கூறியதாக பரவும் செய்தி உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False