
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
போலீஸ் அதிகாரி சைலேந்திர பாபு புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “முதல் பாளே சிக்ஸ் இதுதான் திமுக 🏴🚩 தமிழக சட்ட ஒழுங்கு DGP யாக சைலேந்திரபாபு IPS அவர்கள் நியமனம். வாழ்த்துக்கள் சார் #SylendraBabu IPS” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை நாம் பிராடு கட்சி 3 என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Faizal Hussain என்பவர் 2021 மே 3ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2021 சட்டமன்ற தேர்தல் முடிந்து தி.மு.க ஆட்சி அமைக்க உள்ளது. 2021 மே 7 அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆட்சிப் பொறுப்பேற்காத நிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திரபாபுவை திமுக அரசு நியமித்துள்ளது என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பொதுவாக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அதிகாரிகள் மாற்றம் என்பது நிகழும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
முதலில் இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்த போது அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. அதிகாரிகள் இட மாற்றம் தொடர்பாக தமிழக அரசின் இணையதளத்தில் செய்தி, அறிவிப்பு வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். தமிழக அரசின் அறிவிப்பில் சைலேந்திர பாபு தொடர்பான அறிவிப்பு இல்லை. தற்போது சைலேந்திரபாபு ரயில்வே போலீஸ் டிஜிபி-யாக இருப்பதாக தமிழக அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசல் பதிவைக் காண: tn.gov.in I Archive 1 I tn.gov.in I Archive 2
இது பற்றி சைலேந்திரபாபுவைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால், அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை. சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தொடர்பான விஷயத்தை அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியிருந்தோம். ஆனாலும் அவர் பதில் அளிக்கவில்லை. அவருடைய ட்விட்டர் பக்கத்திலும் யாரும் அவருக்கு வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை.
தமிழக அரசின் பத்திரிகை தொடர்பு பிரிவை தொடர்புகொண்டு கேட்டபோது அப்படி அந்த இட மாறுதல் அறிவிப்பும் வெளியாகவில்லை. இது வெறும் வதந்தி என்றனர்.
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் புதிய ஆட்சி பொறுப்பேற்க உள்ளது. புதிதாக வந்த பிறகுதான் அதிகாரிகள் இட மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அதில் சைலேந்திரபாபு உள்பட யார் வேண்டுமானாலும் மாற்றப்படலாம், அப்படியே தொடரவும் அனுமதிக்கப்படலாம். காபந்து அரசு இருக்கும் சூழலில் இட மாற்றம் செய்ய மாட்டார்கள் என்று அரசியல் விமர்சகர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
நம்முடைய ஆய்வில்,
சைலேந்திர பாபு தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் எந்த ஒரு இட மாற்றம் தொடர்பான அறிவிப்பும் வெளியாகவில்லை.
சைலேந்திரபாபு ரயில்வே போலீஸ் டிஜிபி-யாக உள்ளதாக தமிழக அரசு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சைலேந்திரபாபு தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திரபாபுவை மு.க.ஸ்டாலின் நியமித்ததாக பரவும் தகவல் வெறும் வதந்தி என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திரபாபு நியமனமா?
Fact Check By: Chendur PandianResult: False
