
உத்தரப்பிரதேச போலீஸ் அதிகாரி ஒருவர் தம்பதியினரை பொது இடத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
கார் அருகே போலீஸ் அதிகாரியுடன் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போலவும், இதனால் போலீஸ் அதிகாரி துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுக்கொல்வது போலவும் வருகிறது. அந்த இளைஞருடன் இருந்த பெண் கூச்சல் போடவே அவரையும் அந்த போலீஸ் அதிகாரி சுட்டுக்கொள்வது போல் வீடியோ உள்ளது.
நிலைத் தகவலில், “BJP ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறையினரின் கனிவான செயல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தஞ்சை வடசேரி சிவா என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2021 ஏப்ரல் 16ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உத்தரப்பிரதேசத்திலோ, இந்தியாவின் வேறு எந்த பகுதியிலோ சமீபத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் தம்பதியினரை சுட்டுக்கொன்றார் என்ற செய்தி வரவில்லை. ஆனால் உத்தரப்பிரதேச காவல்துறை அதிகாரி சுட்டுக்கொன்றதாக ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

வீடியோவை உற்றுப் பார்க்கும்போது வண்டியின் பதிவு எண் UP என்று தொடங்கவில்லை. HR என்று தொடங்குவதை காண முடிகிறது. மேலும் போலீஸ் அதிகாரி இரண்டு பேரை சுட்டுக்கொல்லும்போது அருகில் இருந்தவர்கள் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை வெளிப்படுத்தவில்லை. ஃபிரண்ட்ஸ் கஃபே என்ற உணவகம் முன்பு பேசிக்கொண்டிருந்த நபர், போலீஸ் அதிகாரி சுட ஆரம்பித்ததும் மொபைலில் எந்த மாற்றமும் செய்யாமல், உடனடியாக வீடியோ எடுக்க ஆரம்பிக்கிறார்.
வீடியோவில் காண்பிக்கப்படும் குழந்தை எந்த அதிர்ச்சியும் இன்றி சாதாரணமாக நடந்து செல்கிறார். துப்பாக்கி சுடும்போது மட்டும் காதை மூடிக்கொள்கிறார். மற்றபடி அவருக்கோ, மற்றவர்களுக்கோ எந்த பயமும், அதிர்ச்சியும், கோபமும் ஏற்படவில்லை. எனவே, இது உண்மையில் நடந்தது போல தெரியவில்லை.
எனவே, இந்த வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அதே நேரத்தில் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி உள்ளிட்ட பல்வேறு ஃபேக்ட் செக் ஊடகங்களில் இந்த வீடியோ தொடர்பான ஆய்வு கட்டுரை வெளியாகி இருப்பதை காண முடிந்தது.
அதே நேரத்தில் உத்தரப்பிரதேச மாநில காவல் துறை விளக்கம் உள்ளிட்ட ட்வீட் பதிவுகளும் நமக்கு கிடைத்தன. உ.பி காவல் துறை வெளியிட்டிருந்த ட்வீட் பதிவை மொழிமாற்றம் செய்து பார்த்தபோது, “இது குர்கானில் உள்ள ஒரு கேஃப் முன்பு நடந்த வெப் சீரிஸ் படப்பிடிப்பின் காட்சி இது. இதை அந்த கேஃப் மேலாளரிடம் உறுதி செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: Twitter I Archive
கூகுளில் ஃபிரண்ட்ஸ் என்று டைப் செய்தாலே அது கர்னல் ஃபிரண்ட்ஸ் கஃபேவை காட்டியது. அதை ஓப்பன் செய்து பார்த்தபோது நாம் வீடியோவில் பார்த்த அதே கஃபே இருப்பதை காண முடிந்தது. எனவே, இது உத்தரப்பிரதேசத்தில் நடந்தது இல்லை, ஹரியானாவில் என்று உறுதியானது.

அசல் பதிவைக் காண: Google Map I Archive
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவைத் தொடர்புகொண்டு இந்த வீடியோ பற்றிக் கேட்டோம். அப்போது அவர்கள் வீடியோவில் பிரண்ட்ஸ் கஃபே என்று கடை பெயர் தெளிவாக தெரிந்தது. அதன் அடிப்படையில் தேடினோம். அது ஹரியானா மாநிலம் கர்னலில் இருப்பது உறுதியானது. அந்த கஃபே மேலாளர் கிருஷ்ணா நர்வாலைத் தொடர்புகொண்டு பேசினோம்.
அப்போது அவர், “இது மூன்று மாதங்களுக்கு முன்பு வெப் சீரிஸ் ஒன்றுக்காக நடத்தப்பட்ட திரைப்பட படப்பிடிப்பு காட்சி. ஒரு பகுதியை மட்டும் தற்போது வெளியிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர்” என்றார்.
மேலும் ஹரியானா மாநிலம் கர்னல் எஸ்.பி கங்காராம் புனியாவைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், “2021 ஜனவரி 21ம் தேதி கர்னலில் உள்ள பிரண்ட்ஸ் கஃபேக்கு வெளியே நடந்த படப்பிடிப்பின் காட்சி இது. இதற்கு உரிய அனுமதியை எங்களிடம் பெற்றுத்தான் படப்பிடிப்பை நடத்தினர். இந்த வீடியோவை வைத்து வதந்தி பரப்பி வருகின்றனர்” என்றார்.
மேலும், ஃபிரண்ட்ஸ் கஃபே மேலாளர் படப்பிடிப்பின் போது தன்னுடைய மொபைலில் எடுத்த காட்சிகளையும் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவுக்கு அளித்ததாகவும், அதை தங்கள் கட்டுரையில் பதிவிட்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டனர்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் தம்பதியினரை போலீஸ் அதிகாரி சுட்டுக்கொன்றார் என்று பரவும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வெப் சீரிஸ் படப்பிடிப்பு வீடியோவை, உத்தரப் பிரதேசத்தில் தம்பதியினரை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:உத்தரப்பிரதேச போலீஸ் நிகழ்த்திய இரட்டைக் கொலை என பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
