
மேற்கு வங்கத்தில் நமாஸ் செய்ய ரயில் சத்தம் இடையூராக இருந்தது என்பதற்காக ரயில் தண்டவாளத்தை இஸ்லாமியர்கள் பெயர்த்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மக்கள் ரயில் தண்டவாளத்தை பெயர்த்தெடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்தில் நவாப்ரோ, மகிசாசூர் என்ற ஊரில் உள்ள மக்கள் ரயில் தண்டவாளத்தையும் பெயர்த்தெடுத்து ரயில்வே நிலையத்தையும் உடைத்தார்கள். காரணம் தெரியுமா? அவர்கள் நமாஸ் செய்வதற்கு ரயில் சத்தம் இடையூராக இருக்கிறதாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ பதிவை Kavitha Nataraj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 26ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மசூதி, கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் மேற்கு வங்கத்தில் தொழுகைக்கு இடையூறாக ரயில் சத்தம் இருப்பதால் ரயில் தண்டவாளத்தை இஸ்லாமியர்கள் பெயர்த்தனர் என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ரயில் சத்தம் காரணமாக இஸ்லாமியர்கள் ரயில் தண்டவாளத்தை அகற்றியிருந்தால் அது தொடர்பான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும். இது தொடர்பாக தேடிய பொது நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. எனவே, வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை வங்க ஊடகம் ஒன்று 2019ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. 2019ம் ஆண்டு டிசம்பரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நாடு முழுக்க தீவிரமாக இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: YouTube
வங்க மொழியில் வீடியோ இருந்தது. எனவே, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வங்க பிரிவினரின் உதவியை நாடினோம். அவர்கள் வீடியோவை பார்த்துவிட்டு, 2019ம் ஆண்டு சிஏபி-என்ஆர்சி-க்கு எதிராக Naopara Mahishasur ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழிபாட்டுக்கு ரயில் சத்தம் இடையூராக உள்ளது என்று இஸ்லாமியர்கள் தண்டவாளத்தை அகற்றினார்கள் என்று எல்லாம் அதில் குறிப்பிடவில்லை, என்றனர்.
இதன் மூலம் மேற்கு வங்கத்தில் வழிபாட்டுக்கு தடையாக இருந்தது என்று ரயில் பாதையை இஸ்லாமியர்கள் அகற்றினார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதியானது.
முடிவு:
மேற்கு வங்கத்தில் நமாஸ் செய்ய இடையூராக இருந்தது என்று ரயில் தண்டவாளத்தை பெயர்த்த இஸ்லாமியர்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மேற்கு வங்கத்தில் நமாஸ்க்கு இடையூறாக இருந்ததால் ரயில் தண்டவாளத்தை இஸ்லாமியர்கள் பெயர்த்தெடுத்தனரா?
Fact Check By: Chendur PandianResult: False
