குஜராத் ஆம் ஆத்மி நிர்வாகி வீட்டில் சிக்கிய பணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

குஜராத் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி வீட்டில் சிக்கிய பணம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கட்டுக்கட்டாக அறை முழுக்க நிறைந்திருக்கும் பணத்தை சிலர் இயந்திரம் உதவியோடு எண்ணும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஜராத் சூரத் நகர ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சேகர் அகர்வாலின் வீடு இடி ரைடில் பெற்ற தொகையை எண்ண முடியாததை கண்டு அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி, கூடுதல் எண்ணும் இயந்திரத்தையும் கொண்டு வர வேண்டியதாயிற்று. ஊழலை துடைக்க துடைப்பத்துடன் வெளியே வந்தவர்கள் நோட்டுகளை மாற்றுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆம் ஆத்மி கட்சி கட்சி டெல்லி ஆட்சியில் இருந்தது, தற்போது பஞ்சாபில் ஆட்சி செய்து வருகிறது. ஆனால், தொடர்பே இல்லாத குஜராத்தில் அக்கட்சி நிர்வாகி வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம் எடுக்கப்பட்டதாகச் சிலர் பதிவிட்டு வருகின்றனர். குஜராத்தில் பாஜக தான் ஆட்சியில் உள்ளது. அப்படி இருக்க இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

Archive

வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2022ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஒரு தொழிலதிபர் இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்ததாகக் குறிப்பிட்டு இந்த வீடியோவை பலரும் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் கூகுளில் தொடர்ந்து தேடினோம். அப்போது இந்த செய்தியை நியூஸ் 18 கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. மேலும், அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக பல்வேறு செய்திகளும் நமக்குக் கிடைத்தன. 

Archive

மெபைல் கேம் அப்ளிகேஷன் தொடர்பான முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி கொல்கத்தாவில் 6 இடங்களில் சோதனை செய்ததாகவும் 17.32 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இவை எல்லாம் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணத்தை அமலாக்கத்துறை கைப்பற்றியது என்று பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்கின்றன.

முடிவு:

2022ம் ஆண்டு மேற்கு வங்க தொழிலதிபர் ஒருவர் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை வீடியோவை குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:குஜராத் ஆம் ஆத்மி நிர்வாகி வீட்டில் சிக்கிய பணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False