
மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் இருந்த செவிலியர்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்று பாதுகாத்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நிலடுக்கத்தின் போது பச்சிளம் குழந்தைகளை இரண்டு செவிலியர்கள் பாதுகாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நிலநடுக்கத்தின் போது ளதன்னுயிரை பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள் 🔥💪♥️ மியான்மர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2025 மார்ச் 28ம் தேதி மியான்மர், தாய்லாந்து நாட்டில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மர் நாட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மியான்மர் நாட்டில் நிலநடுக்கத்தின் போது ஒரு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைகளைக் காப்பாற்றப் போராடிய செவிலியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதே போன்று இந்த வீடியோ தாய்லாந்தில் பதிவானதாக சிலர் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் இந்த வீடியோ இப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பதிவானதா, தாய்லாந்திலா அல்லது மியான்மரில் ஏற்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம்.
இந்த வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஆயிரக் கணக்கானோர் இந்த சம்பவம் மியான்மரில் நடந்தது என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தது நமக்குக் கிடைத்தது. தொடர்ந்து தேடிய போது ஊடகம் ஒன்றில் சீனாவின் ருயிலியில் (Ruili City, southwest China’s Yunnan Province) மார்ச் 28, 2025 அன்று இந்த வீடியோ பதிவானதாக செய்தி கிடைத்தது. இது மியான்மருக்கு மிக நெருக்கமாக உள்ள நகரம் என்று தெரியவந்தது.
இது தொடர்பாக பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களிலும் செய்தி மற்றும் வீடியோ வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. 2025ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பதிவான வீடியோ காட்சிதான் என்பது தெரியவருகிறது. ஆனால் மியான்மரிலோ தாய்லாந்தில் உள்ள மருத்துவமனையிலோ பதிவான காட்சியல்ல… சீனாவில் பதிவானது என்பது உறுதியாகி உள்ளது.
நிலநடுக்கத்தின் போது குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர்கள் அளித்த பேட்டியும் நமக்கு கிடைத்தது. இவை எல்லாம் இந்த வீடியோ சீனாவில் பதிவானது என்பது உறுதியானது.
இதன் அடிப்படையில் மியான்மர் நாட்டில் உள்ள மருத்துவமனையில் நிலநடுக்கத்தின் போது பதிவான வீடியோ என்பது தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மியான்மில் நிலநடுக்கத்தின் போது குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர்கள் என்று பரவும் வீடியோ சீனாவில் பதிவானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:மியான்மர் நிலநடுக்கத்தின் போது குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Missing context
