பெரியார் பற்றி சீமான் பேசியதற்கு பெரியாரிய உணர்வாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீமானின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அப்போது என்ன நடக்கிறது என்று வீட்டு வாசலுக்கு சீமானின் பெரிய மகன் வந்து பார்த்த வீடியோ செய்தி ஊடகங்களில் வெளியானது. இந்த நிலையில், அந்த சிறுவனின் தாயார் கயல்விழி என்றும், கயல்விழியின் முதல் கணவருக்கு பிறந்த மகன் என்றும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சீமானுக்கு 2013ம் ஆண்டு கயல்விழியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2019ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் திடீரென்று 13-14 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் சீமானுடன் வலம்வர ஆரம்பித்தான். அவனை தன் மகன் என்று சீமான் கூறினார். யார் அந்த சிறுவன் என்று தேடிய போது, சிறுவனின் பெயர் ஆகில்யன் காளிமுத்து என்றும் அவர் கயல்விழியின் மூத்த சகோதரியான மறைந்த அமுதாவின் மகன் என்றும் முன்பு செய்திகள் வெளியாகி இருந்தன.
தொடர்ந்து தேடிய போது, சீமானின் பெரிய மகன் ஏன் சீமானுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்று முன்பு நிருபர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பியிருந்த வீடியோ கிடைத்தது.
ஆனால், அதில் கூட அந்த சிறுவன் பற்றிய விவரங்களை நிருபர்களும் கேட்கவில்லை, சீமானும் சொல்லவில்லை. இந்த சூழலில், அவர் யார் என்று விகடன் ஊடகம் சார்பில் சீமானின் குடும்பத்தினரிடம் நேரடியாக கேட்டு விளக்கம் பெற்றிருந்தனர்.
சீமானின் மாமியாரும் கயல்விழியின் தயாராருமான மனோகரி காளிமுத்து 2023ம் ஆண்டு விகடனுக்கு அளித்திருந்த பேட்டியில், “என் பெரிய பொண்ணுக்கும் அவ மாப்பிள்ளைக்கும் பிரச்னை இருந்தது நிஜம்தான். அவ இறந்ததுக்குப் பிறகு ஆகில் (பேரன்) அவனாத்தான் அவன் அப்பா கூட போக மாட்டேனுட்டான். அவன் இங்கேயே இருந்து பழகினதுதான் காரணமா இருக்கலாம். அவன் என் சின்ன மகளை கயலம்மான்னுதான் கூப்பிடுவான். சீமானையும் ஆரம்பத்துல சித்தப்பானுத்தான் கூப்பிட்டிட்டிருந்தான். சமீபமாத்தான் அப்பானு சொல்றான். குழந்தையே அப்படிக் கூப்பிடறதால அவருமே பேட்டிகள்ல எனக்கு ரெண்டு மகன்கள்னு சொல்றார். இதை வச்சுகிட்டு யாரும் தப்பும் தவறுமா கிளப்பி விடுறாங்களோ என்னவோ?” என்று கூறியிருந்தார்.
உண்மைப் பதிவைக் காண: vikatan.com I Archive
சீமானின் பெரிய மகன் தொடர்பாக சீமான் தரப்பு விளக்கத்தைப் பெற சீமானுடன் இருக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி (பெயர் வெளியிட விரும்பவில்லை) ஒருவரைத் தொடர்புகொண்டோம். அவர் நம்மிடம், “சீமானின் துணைவியாரின் சகோதரி அமுதாவின் மகன் அவர். அவர் பெயர் ஆகில்யன். சில வருடங்களுக்கு முன்பு அமுதா காலமாகிவிட்டார். அவரது கணவர் அமெரிக்காவில் உள்ளார். தனது தந்தையுடன் செல்ல ஆகில்யன் மறுத்துவிட்டார். இதனால் தன் பாட்டி மற்றும் சித்தி கயல்விழி ஆகியோரின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். சீமானை அவர் அப்பா என்று அழைப்பார். சீமானும் தனது மகன் என்று பாசத்துடன் சொல்வார்” என்றார்.
