
‘’குருவாயூர் கோயில் சார்பாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குட்டி யானை வழங்கப்பட்டது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ கேரள மாநில குருவாயூர் கோயில் நிர்வாகம் இந்த குட்டி யானையை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பரிசாக வழங்கியது. இந்த குறும்பு குட்டி யானை “கண்ணும் கண்ணும்” என்ற கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு ஆனந்தமாக நடனமாடி மகிழ்கிறது.
“கண்ணும் கண்ணும்” என்ற மலையாள மொழி பாடல், சமீப காலங்களில் மிகவும் பிரபலமான கிறிஸ்துமஸ் பாடல்களில் ஒன்றாகும். இது கிறிஸ்துமஸின் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு துள்ளலான பாடல். இந்தப் பாடல் முதலில் “டிசம்பர் வாய்ஸால்” பிரபலமானது. இந்தப் பாடல் டிசம்பர் வாய்ஸின் உரிமத்தின் கீழ் மீண்டும் உருவாக்கப்பட்டது மற்றும் மார் தோமா சர்ச் பாதிரியார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் அழகாக பாடப்பட்டுள்ளது.
இந்த குறும்பு குட்டி யானைக்கு மனித மதங்களிடையே உள்ள வேறுபாடுகள் (Differences among human religions) என்பது பற்றிய கவலை எதுவும் இல்லை. அதனால் தான் இந்த குட்டி யானை குறும்பாகவும், துறுதுறுப்பாகவும் மற்றும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
அருமை♥️’’, என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன், குட்டி யானை ஒன்று நடனம் ஆடுவதுபோன்ற காட்சிகள் உள்ள வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதல்கட்டமாக, இதுபற்றி நாம் நேரடியாக, குருவாயூர் கோயில் தேவஸ்தானத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அப்போது, ‘’இதுபோன்று எந்த பரிசும் சமீப நாட்களில் குருவாயூர் கோயில் சார்பாக, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வழங்கப்படவில்லை. மேலும், இந்த வீடியோவில் காணப்படும் யானைக்கும், குருவாயூர் கோயிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை,’’ என்றனர்.
அடுத்தப்படியாக, குறிப்பிட்ட வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்று தகவல் தேடினோம். அதில் உள்ள Voice of Thrissur என்ற வாட்டர் மார்க் மூலமாக, இது Voice of Thrissur என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டு பகிரப்பட்ட ஒன்று, என தெரியவந்தது.
இதன்மூலமாக, சமூக வலைதளங்களில் ஏற்கனவே பகிரப்பட்ட வீடியோ ஒன்றை தற்போது எடுத்து, குருவாயூர் கோயில் சார்பாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குட்டி யானை வழங்கப்பட்டதாகக் கூறி, வதந்தி பரப்புவதாக, நமக்கு தெரியவருகிறது.
இறுதியாக, திருச்செந்தூர் முருகன் கோயில் சார்பாக அங்குள்ள அறநிலையத்துறை அலுவலகத்தை கேட்டபோது, ‘’குருவாயூர் கோயிலில் இருந்து, குட்டி யானை எதுவும் வழங்கப்படவில்லை,’’ என்று தெரிவித்தனர்.
இவற்றின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:குருவாயூர் கோயில் சார்பாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குட்டி யானை வழங்கப்பட்டதா?
Written By: Pankaj IyerResult: False
