
பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரம் காரணமாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டார் என்று தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்து ஃபேஸ்புக்கில் பதிவு இடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*பிரேக்கிங் நியூஸ்* சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தேர்தல். இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி. பிரதமர் மோடியின் சாணக்கிய ராஜதந்திரம். உலக அரங்கில் பிரிட்டனின் தோல்வி. பிரதமர் மோடி உலகம் முழுவதும் உறவுகளை எவ்வாறு உருவாக்கினார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் நீதிபதி தல்வீர் சிங் 193 வாக்குகளில் 183 வாக்குகளைப் பெற்றார் (ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒருவர்) பிரிட்டனின் நீதிபதி கிறிஸ்டோபர் கிரீன்வுட்டை தோற்கடித்தார். பட்டத்தில் பிரிட்டனின் 71 ஆண்டுகால ஏகபோகத்தை முறியடித்தார். பிரதமர் மோடியும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் கடந்த 6 மாதங்களாக இதை சாதிக்க கடுமையாக உழைத்து வருகின்றனர்! 193 நாடுகளின் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு, எளிதில் வெற்றி பெறுவது உறுதியான பிரிட்டிஷ் வேட்பாளர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவது மிகவும் கடினமான பணியாக இருந்தது. பதினொன்றாவது சுற்று வாக்கெடுப்பில், நீதிபதி தல்வீர் பண்டாரி பொதுச் சபையில் 193 வாக்குகளில் 183 மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 15 இல் 15 வாக்குகளைப் பெற்றார். நீதிபதி தல்வீர் பண்டாரி 9 ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடிப்பார். இந்த 183 நாடுகளும் இந்தியாவுக்கு வாக்களித்தன, அவர்களில் யாரும் “குருட்டு மோடி பக்தர்கள்” அல்ல! அவர்கள் அனைவரும் சிந்தனைமிக்கவர்கள், நமது சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் நமது பிரதமர் மோடிஜி எவ்வளவு மரியாதை, மரியாதை மற்றும் நல்லுறவைக் கட்டியெழுப்பியுள்ளார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்திய செய்தி ஊடகங்கள் இதுபோன்ற பெரிய விஷயங்களை ஒளிபரப்புவதில்லை, மோடிக்கு எதிரான செய்திகளையே விரும்புகிறார்கள், அதைத்தான் தேடி அலைகின்றனர். கோரிக்கை – உங்கள் மற்ற நண்பர்களுக்கும் அனுப்பவும். ஜெய் ஹிந்த்-ஜெய் பாரத் மாதா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய நீதிபதி தேர்வு செய்யப்பட்டதாக அதுவும் தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டதாக சமீபத்தில் எந்த செய்தியும் வெளியாகவில்லை. சமீபத்தில்தான் சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகினார். புதிய தலைமை நீதிபதி இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பிறகு எதன் அடிப்படையில் பிரேக்கிங் நியூஸ் என்று பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.
சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவைச் சார்ந்த தல்வீர் பண்டாரி பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2017ம் ஆண்டு பாகிஸ்தான் சிறையிலிருந்த இந்தியக் கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷன் யாதவுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட சூழலில் சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இருந்த தல்வீர் பண்டாரி தொடர்பான செய்திகள் வெளியானது. அப்போதே அவருக்கு இன்னும் 9 ஆண்டுகள் பதவிக்காலம் இருப்பது போன்று செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், இப்போது புதிதாக எதுவும் நடந்தது போன்று தெரியவில்லை.
உண்மைப் பதிவைக் காண: icj-cij.org I Archive
சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டாரா என்று அறிய சர்வதேச நீதிமன்றத்தின் இணையதளத்தைப் பார்வையிட்டோம். அதில், தலைமை நீதிபதியாக தற்போது யாரும் இல்லை. உகாண்டா நாட்டைச் சார்ந்த ஜூலியா செபுடின்டே (Julia SEBUTINDE) என்பவர் துணைத் தலைவராக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தல்வீர் பண்டாரி சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகளுள் ஒருவர் என்றும் அவர் முதன் முறையாக 2012ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார் என்றும் அதன் பிறகு 2018ம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
2012ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் நரேந்திர மோடி பிரதமர் ஆனார். இதன் மூலம் நரேந்திர மோடியின் ராஜதந்திரத்தால்தான் தல்வீர் பண்டாரி நீதிபதியானார் அதுவும் சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார் என்று கூறுவது தவறானது என்பது தெளிவாகிறது.
உண்மைப் பதிவைக் காண: mea.gov.in I Archive I puthiyathalaimurai.com I Archive
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் “உலக அளவில் இங்கிலாந்துக்கு தோல்வி. பிரிட்டனின் கிறிஸ்டோபர் கிரீன்வுட்டை தோற்கடித்தார். 71 ஆண்டுக்கால ஏகபோகத்தை முறியடித்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி ஏதும் நடந்ததா என்று அறிய சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது புதிய தலைமுறை, தமிழ் இந்து உள்ளிட்ட ஊடகங்களில் 2018ம் ஆண்டு வெளியான செய்தி நமக்குக் கிடைத்தது. அதில் இங்கிலாந்து சார்பில் கிரீன்வுட் போட்டியிட்டதாகவும் கடைசியில் அவர் போட்டியில் இருந்து விலகியதால் தல்வீர் பண்டாரி வெற்றி பெற்றார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இங்கிலாந்து ஏகபோகமாகத் தலைவர் பதவியை வகித்ததாக எந்த தகவலும் இல்லை.
உண்மைப் பதிவைக் காண: press.un.org I Archive
சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் பட்டியலைப் பார்த்தோம். அதில் பல நாடுகளைச் சார்ந்தவர்களும் தலைமை நீதிபதியாக இருந்துள்ளதைக் காண முடிந்தது. கடைசியாக லெபனான் நாட்டைச் சார்ந்த நவாஃப் சலாம் என்பவர் தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். கடந்த வாரம் (13 ஜனவரி, 2025) அன்று அவர் தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதைத் தொடர்ந்து காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் 2025 மே 27ம் தேதி நடைபெறும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதன் பிறகே அடுத்த தலைமை நீதிபதி தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது. தல்வீர் பண்டாரி இரண்டாவது முறையாக சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட போது தலைமை நீதிபதியாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மைப் பதிவைக் காண: icj-cij.org I Archive
நம்முடைய ஆய்வில் தல்வீர் பண்டாரி சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து 71 ஆண்டுகளாக தலைமை நீதிபதி பொறுப்பை வைத்திருந்தது என்ற தகவலும் தவறானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தல்வீர் பண்டாரி 2012ம் ஆண்டில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதே சர்வதேச நீதிமன்ற நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுவிட்டார்.
2018ம் ஆண்டு இரண்டாவது முறையாக சர்வதேச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்தியா சார்பில் போட்டியிட்ட போது, இங்கிலாந்து சார்பில் கிறிஸ்டோபர் கிரீன்வுட் போட்டியிட்டுள்ளார். கடைசியில் கிரீன்வுட் போட்டியிலிருந்து விலகவே தல்வீர் பண்டாரி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
தல்வீர் பண்டாரிக்கு முன்பாக கூட சில இந்தியர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இப்படி வழக்கமான நடைமுறையை மோடியால்தான் சாத்தியமானது என்பது போன்று மிகைப்படுத்தி தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2017ம் ஆண்டு சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் பல்வீர் பண்டாரி தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை மாற்றி, இப்போது அவர் தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டதை போன்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:மோடியின் ராஜதந்திரத்தால் சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்தியர் தேர்வு என்ற தகவல் உண்மையா?
Written By: Chendur PandianResult: False
