
வங்கதேச எல்லை நகரான மாங்டாவ் என்ற ஊரை மியான்மர் ராணுவம் கைப்பற்றி, வங்கதேச எல்லை பாதுகாப்புப் படை வீரர்களை சிறைபிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ராணுவ வீரர்கள் ஏராளமான இளைஞர்களை அரை நிர்வாணமாக கைகளை கட்டி அழைத்துச் செல்வது போன்று புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#பர்மா புத்தமத ராணுவம் பங்களாதேஷ் #முஸ்லீம் மத மவங்டா நகரை கைப்பற்றினர்.மேலும் #பங்களாதேஷ் எல்லை பாதுகாப்பு படையினரை கைது செய்தனர். இந்தியா பர்மா விற்கு ஆதரவு கொடுத்தால் பங்களாதேஷ் மூன்று நாடுகளாக சிதறும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மற்றொரு பதிவில், “அரக்கன் ஆர்மி மியான்மர் பங்களாதேஷ் எல்லை நகர் Maungdaw கைப்பற்றி பங்களாதேஷ் பார்டர் கார்ட் வீரர்களை கைது செய்தனர் பங்களாதேஷ் மைனாரிட்டிகள் அரக்கன் ஆர்மி வீரர்களுடன் இணைய வேண்டிய நேரம் இது… அப்புறம் எல்லாம் அதுவாவே நடக்கும்..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவுகளை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மியான்மர் ராணுவம் வங்கதேசத்தின் எல்லையோர நகரை கைப்பற்றியது என்று சிலரும், மியான்மரில் உள்ள அரக்கன் ஆர்மி வங்கதேச நகரத்தைக் கைப்பற்றி, அங்கிருந்த வங்கதேச ராணுவ வீரர்களை கைது செய்தது என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு நாட்டுக்குள் நுழைந்து, நகரத்தையே கைப்பற்றுகிறார்கள் என்றால் அது சர்வதேச அளவில் பிரச்னையை ஏற்படுத்தும். இரு நாடுகளுக்கு இடையே போர் நிகழும் அளவுக்கு பெரிய பிரச்னையாக இருக்கும். ஆனால், இது வரை அப்படி எந்த ஒரு செய்தியையும் பார்க்கவில்லையே என்ற சந்தேகத்தில் இந்த தகவல் தொடர்பாக ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: irrawaddy.com I Archive
கூகுளில் மாங்டாவ், மியான்மர், வங்கதேசம் என சில அடிப்படை வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். அப்போது, மியான்மரின் எல்லையோர நகரமான மாங்டாவ் என்ற ஊரை அரக்கன் ஆர்மி என்ற மியான்மர் நாட்டின் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றி, அங்கிருந்த மியான்மர் ராணுவ வீரர்களை கைது செய்திருப்பதாகச் செய்திகள் கிடைத்தன. இந்த மாங்டாவ் நகரம் தான் வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்த மியான்மர் நாட்டு ராணுவத்தின் கடைசியாக எஞ்சியிருந்த புறக்காவல் நிலையம் என்று ஏ.பி வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: apnews.com I Archive
இதன் மூலம் மியான்மர் – வங்கதேசத்திற்கு இடையேயான 271 கி.மீ எல்லைப் பகுதி முழுவதையும் அரக்கான் ஆர்மியின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் மியான்மர் நாட்டின் ராக்கைன் மாநிலத்தின் வடக்குப் பகுதி முழுவதும் அரக்கான் ஆர்மி கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் வங்கதேச நகரத்தை மியான்மர் ராணுவம் அல்லது மியான்மர் பயங்கரவாத இயக்கம் கைப்பற்றியது என்று கூறுவது தவறானது என்பது தெளிவாகிறது. வங்கதேச எல்லையில் அமைந்திருந்த மியான்மர் நாட்டின் நகரத்தை மியான்மர் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து மியான்மர் போராளிகள் குழு கைப்பற்றியுள்ளது என்பது நமக்கு கிடைத்த செய்திகள் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் வங்கதேச நகரத்தை கைப்பற்றி, அங்கிருந்த வங்கதேச எல்லை பாதுகாப்புப் படை வீரர்களை மியான்மர் சிறைபிடித்தது என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வங்கதேச எல்லையையொட்டி மியான்மர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரையும் மியான்மர் போராளிகள் குழு கைப்பற்றிய செய்தியை தவறாக வங்கதேச நகரத்தை மியான்மர் கைப்பற்றியது என்று பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:வங்கதேச எல்லை நகரைக் கைப்பற்றிய மியான்மர் ராணுவம் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
