
சாக்கு மூட்டையில் குழந்தை கடத்தப்படும் காட்சி என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கட்டப்பட்டுக் கிடக்கும் சாக்கு மூட்டையைத் திறக்கு கீழே கொட்ட, அதிலிருந்து சிறுவன் ஒருவன் உணர்வு அற்ற நிலையில் விழுகிறான். நிலைத் தகவலில், “குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வோம்
புள்ள புடிக்கிறவன் சாக்கு முட்டையில போட்டு கொண்டு போயிடுவான் கேள்விப்பட்டிருப்போம் ஆனா அதை இப்ப நம்ம நேர்ல பார்க்கிறோம் எந்த ஊர் என்று தெரியவில்லை…!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை அறிவோம்:
சிறுவனை சாக்கு மூட்டையில் கடத்தும் வீடியோ என்று பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். வீடியோவில் பலரும் பேசுவதையும் அழுவதையும் கேட்க முடிகிறது. கொஞ்சம் வங்க மொழி போலத் தெரிகிறது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவிட்டுத் தேடினோம். அப்போது கடந்த டிசம்பர் 2025ல் இந்த வீடியோவை ஒடிஷா ஊடகங்கள் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. ஒடியா மொழியில் வெளியான பதிவை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில், “கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள சம்புவா காவல் எல்லைக்குட்பட்ட கோபிநாத்பூர் கிராமத்தில் சாக்கு மூட்டையில் சிறுவன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது” என்று இருந்தது.
இந்த தகவல் அடிப்படையில் கூகுளில் தேடினோம். அப்போது ஆங்கிலத்தில் வெளியான பல செய்திகள் நமக்குக் கிடைத்தன. டிசம்பர் 23ம் 9 வயது சிறுவன் ஒருவன் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென்று அவன் காணாமல் போகவே, குடும்பத்தினர், உறவினர்கள் அக்கம் பக்கங்களில் தேடினர். செவ்வாய்க் கிழமை காலை சிறுவனின் உடல் ஒரு வீட்டின் முன்பு சாக்குப் பையில் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் பழிவாங்கும் நோக்கில் நடந்தது என்றும், இது தொடர்பாக அந்த கிராமத்தைச் சார்ந்த கங்காராம் முண்டா என்பவரை போலீசார் கைது செய்ததாகவும் செய்திகள் நமக்குக் கிடைத்தன.
உண்மைப் பதிவைக் காண: timesofindia I Archive I ommcomnews.com I Archive
ஒடிஷாவில் சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்த வீடியோவை, சிறுவன் கடத்தப்படும் வீடியோ என்று தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. முன் விரோதம் காரணமாக சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளான். இதை வைத்து குழந்தை கடத்தல் என்று பீதியைத் தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ளனர்.
நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஒடிஷாவில் சிறுவன் கொலை செய்யப்பட்ட வீடியோவை சிறுவர்களை சாக்குப் பையில் போட்டு கடத்தும் கடத்தல்காரர்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:சாக்கு மூட்டையில் குழந்தை கடத்தல் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
