
‘’யோகி ஆதித்யநாத் கோவை வந்தபோது பாஜக.,வினர் செய்த வன்முறை அட்டகாசம்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதில், பாஜக கொடி பிடித்தபடி, பேருந்தை வழிமறித்து வன்முறை செய்யும் சிலரது புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேலே, ‘’ நேற்று கோவையில் பிஜேபியின் அராஜகம். நாளை தமிழகம் முழுவதும் இதுதான் நடக்கும். கவனம் தேவை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட பதிவை வெளியிட்டிருப்பவர், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஆவார். அதனால், அவர் கூறியிருக்கும் தகவல் உண்மைதான், என்று பலரும் நம்புகின்றனர்.
ஆனால், உண்மையில், அவர் ஒரு தவறான புகைப்படத்தை பகிர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 முன்னிட்டு, மற்றவர்களையும் குழப்பியுள்ளார்.
கடந்த மார்ச், 2021 இறுதியில், யோகி ஆதித்யநாத், சட்டமன்ற தேர்தலில், பாஜக.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் நோக்கில் தமிழ்நாடு வந்திருந்தார். அப்போது, அவருக்கு ஆதரவாக கோவையின் சில இடங்களில் பாஜக.,வினர் வன்முறையில் ஈடுபட்டதாக, புகார் எழுந்தது.
இதையொட்டியே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படமும் சமூக வலைதளங்களில் சுற்றில் விடப்பட்டுள்ளது. ஆனால், அந்த புகைப்படம் 2016ம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகும்.

இதன்படி, கடந்த 2016ம் ஆண்டு இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
சசிக்குமார் கொலைக்கு நீதி கேட்டு, இந்து முன்னணி மற்றும் பாஜக.,வினர், கோவையில் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் நாம் கண்டது.
இதனை 2016 Coimbatore riots என்ற பெயரில் கூகுளில் தேடினால், நிறைய செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்களை காணலாம்.
எனவே, 2016ம் ஆண்டில் நிகழ்ந்த பாஜக ஆதரவாளர்களின் வன்முறை புகைப்படத்தை எடுத்து, 2021ல் யோகி ஆதித்யநாத் ஆதரவாக பாஜக செய்த வன்முறை என்று கூறி தகவல் பரப்பியுள்ளனர் என்று தெரியவருகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:யோகி ஆதித்யநாத் வருகையின்போது பாஜக வன்முறை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்!
Fact Check By: Pankaj IyerResult: Partly False
