FactCheck: பழைய புகைப்படத்தை மாடலாக வைத்து பகிரப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கார்ட்டூன்- உண்மை என்ன?
‘’இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் கார்ட்டூன் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
வயதான பெண்மணி ஆக்சிஜன் சிலிண்டருடன் சாலையில் அமர்ந்திருக்க, அதனைப் பார்த்து, சர்தார் படேல் சிலை தலையில் அடித்துக் கொள்வதைப் போலவும் வரையப்பட்டுள்ள இந்த கார்ட்டூனை, வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் சமூக வலைதளங்களில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இந்த கார்ட்டூனை பகிர்வதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
இந்தியா முழுக்க, கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், சாமானிய மக்கள் தொடங்கி, பெரும் பணக்காரர்கள் வரை பலரும் உயிரை காப்பாற்ற வேண்டிய அச்சத்தில் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்த சூழலில், டெல்லி போன்ற பெரு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, தலைநகர் டெல்லியில் பெரும் சுகாதார அவலம் ஏற்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு உரிய ஆக்சிஜனை விநியோகிக்க முடியாமல், பல்வேறு மருத்துவமனைகளும் கை விரித்து வருவதால், பலரது உயிருக்கு உத்தரவாதமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் நாடு முழுக்க பலத்த சர்ச்சையை ஏற்படுத்தவே, இதுபற்றி ஒவ்வொருவரும் தங்களது கருத்தை கூறி, விமர்சித்து வருகின்றனர்.
இந்த வரிசையில், மேற்கண்ட கார்ட்டூனையும் பலர் ஷேர் செய்வதைக் காண முடிகிறது. உண்மையில், இது ஆக்சிஜன் தட்டுப்பாட்டை விளக்கும் வகையில் வரையப்பட்ட கார்ட்டூனாக இருந்தாலும், இதற்காக சம்பந்தப்பட்ட கார்ட்டூனிஸ்ட் எடுத்துக் கொண்ட புகைப்பட மாடல் தவறான ஒன்றாகும்.
ஆம். குறிப்பிட்ட கார்ட்டூனில் உள்ள முன்மாதிரி புகைப்படம், வயதான பெண்மணி ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டருடன் சாலையோரம் அமர்ந்திருப்பதைப் போன்று உள்ளது. அந்த புகைப்படம், கடந்த 2018ம் ஆண்டு முதலாகவே இணையத்தில் பயன்பாட்டில் உள்ளதாகும். அதற்கும், கொரோனா வைரஸ் தொற்று காலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதுபுரியாமலேயே, அதனை மாடலாக எடுத்து, சம்பந்தப்பட்ட நபர் கார்ட்டூனாக வரைய, மற்றவர்கள் அதனை உண்மை என நம்பி ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர்.
இதுபற்றி முன்னணி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருக்கிறது.
எனவே, 2018ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் புகைப்படத்தை எடுத்து, தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு உடன் தொடர்புபடுத்தி தவறான கார்ட்டூனை வரைந்துள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:பழைய புகைப்படத்தை மாடலாக வைத்து பகிரப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கார்ட்டூன்- உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: Explainer