
தி.மு.க ஆட்சியில் பட்டியலினத்தைச் சார்ந்த முதியவருக்கு சாதிய வன்கொடுமை நடந்துள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
முதியவர் ஒருவர் சிலர் காலில் விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழகத்தில் நடப்பது திமுகவின் #கோபாலபுர_கோமாளி யின்
சமூக நீதி ஆட்சியே…. தூத்துக்குடி மாவட்டத்தில் தலித் முதியவர் ஒருவரின் ஆடுகள் மற்ற சாதியினர் வயல்களில் மேய்ந்ததால் அவரை காலில் விழ வைத்து வீடியோ வெளியிட்ட சாதி வெறியர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமை நடந்துள்ளது என்று ஒரு வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்ததாக எந்த செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். ஆனால், நமக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை. எனவே, தூத்துக்குடி, கயத்தாறு, ஆடு மேய்த்த தலித் முதியவர் என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது, 2020ம் ஆண்டு இந்த வீடியோவை திருமாவளவன் வெளியிட்டிருந்தது தெரியவந்தது.
2020ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி இந்த வீடியோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்த திருமாவளவன், “#அநாகரிகம்: வட இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டிலும் தொடரும் அநாகரிகம். கயத்தாறு அருகே ஓலைக்குளம் கிராமம் ஆதிக்குடியினத்தைச் சார்ந்தவரின் ஆடுகள் தங்களின் கொல்லைப் பகுதியில் எப்படி நுழையலாமென இந்தக் கேவலத்தை அரங்கேற்றியுள்ளனராம்” என்று குறிப்பிட்டிருந்தார். 2020ம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க தான் ஆட்சியிலிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: indianexpress.com I Archive I oneindia I Archive
திருமாவளவன் வெளியிட்டிருந்த ட்வீட் அடிப்படையாக வைத்து தொடர்ந்து தேடினோம். அப்போது இது தொடர்பாக வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில் இந்த சம்பவம் கயத்தாறில் நடந்தது என்றும், காலில் விழுந்த நபரின் பெயர் பால்ராஜ் என்றும், அவரை காலில் விழ வைத்த ஏழு பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நம்முடைய ஆய்வில் தி.மு.க ஆட்சியில் தலித் முதியவர் சாதிய வன்கொடுமை செய்யப்பட்டார் என்று பரவும் சம்பவம் 2020ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் நடந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்கள் ஆட்சியில் நடந்த சம்பவத்தை தி.மு.க ஆட்சியில் நடந்தது போன்று அ.தி.மு.க-வினர் தற்போது பகிர்ந்து வருவதைத் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
2020ம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி இருந்த போது நடந்த சாதிய வன்கொடுமை சம்பவம் ஒன்றின் வீடியோவை இப்போது திமுக ஆட்சியில் நடந்ததாக தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:தி.மு.க ஆட்சியில் முதியவருக்கு சாதிய வன்கொடுமை நடந்ததாக பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
