உலகக் கோப்பை கிரிக்கெட் தோல்வியிலிருந்து மீள ரோஹித் ஷர்மாவுக்கு ஒரு மாதம் ஆகும் என்று அவரது மகள் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I thirdeyetalkies.com I Archive 2

ரோஹித் ஷர்மா மற்றும் அவரது மகள் புகைப்படங்களை வைத்து உருவாக்கப்பட்ட செய்தியின் லிங்க் ஃபேஸ்புக்கில் 2023 நவம்பர் 24ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில், "‘எங்கப்பா சிரிக்க ஒரு மாதமாகும்...’ரோஹித் ஷர்மாவின் நிலையை சொன்ன மகள் சமைரா... வைரல் வீடியோ" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. யூடியூபிலும் சிலர் இந்த வீடியோவை உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு சிலர் பதிவிட்டிருந்தனர்.

உண்மை அறிவோம்:

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த சூழலில் தன் தந்தை பற்றி ரோஹித் ஷர்மாவின் மகள் சமைரா பேசியதாக வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதன் அடிப்படையில் செய்தியை வெளியிட்டுள்ளனர்.

செய்தியை பார்த்தோம். அதில், "இந்த போட்டியில் தோல்வியடைந்த பிறகு, ரோஹித் சர்மா ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் தவிர்த்து வருகிறார். இதற்கிடையில், அவரது ஐந்து வயது மகள் சமைராவின் இதயத்தைத் தொடும் அழகான வீடியோ வைரலாகி வருகிறது. இது ரோஹித் சர்மாவின் தற்போதைய நிலைமையைப் பற்றி சொல்கிறது.

சிறுமியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கான பதிலைக் கேட்டு அனைவரது மனமும் நொறுங்கியது. ஒரு நிருபர் தனது தந்தையைப் பற்றி கேட்டபோது, ​​​​சமைரா சற்று நிதானித்து அப்பாவித்தனத்துடனும், நம்பிக்கையுடனும் ஊடகங்களை எதிர்கொண்டார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெளிவாக குறிப்பிட்டிருந்தது.

இந்த வீடியோ கடந்த ஆண்டே வைரல் ஆனது நினைவிலிருந்ததால் அது தொடர்பாக தேடினோம். 2022ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த வீடியவை வேந்தர் டிவி வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில் கொரோனா தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வரும் ரோஹித் ஷர்மா பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மகள் நலமாக உள்ளார், தன் அறையில் ஓய்வெடுத்து வருகிறார் என்று அழகாக ரசிகர்களுக்கு கூறினார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Archive

மேலும், இந்த வீடியோ 2022ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதில் லெஸ்டரில் (Leicester, இங்கிலாந்து) தன்னுடைய தந்தை அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார் ரோஹித் ஷர்மாவின் மகள் கூறிய காட்சி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்கின்றன.

முடிவு:

உலகக் கோப்பை தோல்வி வேதனையில் இருந்து ரோஹித் ஷர்மா ஒரு மாதத்தில் வெளிவருவார் என்று அவர் மகள் கூறினார் என்று பரவும் வீடியோ 2022ல் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘எங்கப்பா சிரிக்க ஒரு மாதமாகும்’ என்று ரோஹித் ஷர்மா மகள் கூறியதாகப் பரவும் வதந்தி!

Written By: Chendur Pandian

Result: False