
தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் ரூ.65க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததாக ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு! தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை 65 மட்டுமே. தமிழக அரசின் வரி 35 ஐ குறைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Beesmar என்ற ஃபேஸ்புக்ஐடியைக் கொண்ட நபர் 2021 செப்டம்பர் 23ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பெட்ரோல் விலை மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு போல பலரும் இந்த நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு மிகக் குறைவாக வரி விதிப்பது போலவும், மாநில அரசுகள் மிக அதிக அளவில் வரி விதிப்பது போலவும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது உண்மையில்லை என்று ஏற்கனவே, நாம் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இந்த சூழலில் தமிழ்நாடு அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு விதிக்கப்படும் மாநில அரசு வரியில் 35ஐ குறைத்து, பெட்ரோல் விலையைக் குறைத்தது போல சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு 23 -24 ரூபாய் என்ற அளவில் வரியை வசூலிக்கும் நிலையில், எப்படி 35 ரூபாயை குறைக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.
தமிழ்நாடு அரசு வரி 23 -24 என்ற அளவில் இருக்கும்போது 35 ரூபாய் குறைக்க வாய்ப்பில்லை. இருப்பினும் தமிழ்நாடு அரசு இப்படி ஏதும் அறிவிப்பு வெளியிட்டதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழ்நாடு அரசு செய்தித் துறையைத் தொடர்புகொண்டு கேட்ட போது, இப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்றனர்.
சன் நியூஸ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு உள்ளது. எனவே, சன் நியூஸ் இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று பார்த்தோம். அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்த போது அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. அதே நேரத்தில் 2021 செப்டம்பர் 22ம் தேதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று முதமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று வெளியாகி இருந்தது. அதில், “Made in TamilNadu – முதலமைச்சர் பேச்சு! “Made in India போல உலகின் மூலை முடுக்கெல்லாம் Made in TamilNadu என்ற குரல் ஒலிக்க வேண்டும். அதுதான் எங்கள் ஆசை, லட்சியம். அந்த லட்சியத்தை நோக்கி எங்கள் பயணம் நிச்சயம் அமைந்துவிடும்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து விஷமத்தனமான வதந்தியை பரப்பியிருப்பது உறுதியானது. இது குறித்து சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மனோஜை தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது என்று கூறினார்.

அசல் பதிவைக் காண: Facebook
பெட்ரோல் மீதான அனைத்து வரிகளும் ரத்து செய்யப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்தார் என்று சிலர் வதந்தி பரப்பினர். அந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை என்று நியூஸ் 7 தமிழ் உறுதி செய்திருந்தது. அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் தற்போது தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையை குறைத்து விட்டது போன்று வதந்தியை பரப்பி வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: Facebook
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை குறைக்கப்படுகிறது என்று பகிரப்படும் பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகின்றன.
முடிவு:
இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் ரூ.65க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் ரூ.65க்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
