
கடைசி ஓவர் வரை ஆர்சிபி ரசிகர்களை தவறவிட்ட தோனி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆர்சிபி பெண் ரசிகர் ஒருவர் அழும் புகைப்படங்களை சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கடைசி ஓவர் வரை RCB ரசிகர்களை கதறவிட்ட தோனி…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியிடம் தோல்வியடைந்தது. இதன் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை சிஎஸ்கே இழந்தது. ஆனாலும் அந்த கடைசி ஆட்டத்தில் கடைசி ஓவர் வரை ஆர்சிபி ரசிகர்களை தோனி கதறவிட்டார் என்றும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு பெண் ரசிகை ஒருவர் கதறி அழுதார் என்றும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படம் கடந்த ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது போல் தெரிந்ததால் இந்த புகைப்படத்தை ஆய்வு செய்தோம். புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நம்முடைய சந்தேகம் உண்மையானது. இந்த புகைப்படம் 2023ம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன.
அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான ஆட்டத்தின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதா என்று பார்த்தோம். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடனான போட்டியின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக நியூஸ் 18 வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: news18.com I Archive
நியூஸ் 18 வெளியிட்டிருந்த செய்தியில் இந்த பெண்ணின் அழும் புகைப்படத்துடன் பலரும் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டிருந்த பதிவுகளையும் பயன்படுத்தியிருந்தனர். அந்த பெண் அழும் வீடியோவும் நமக்கு கிடைத்தது. இவை எல்லாம் இந்த புகைப்படத்துக்கும் 2024 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோதிய போட்டியின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்தன.
நம்முடைய ஆய்வில் ஆர்சிபி ரசிகர்களை கதறவிட்ட தோனி என்று பகிரப்படும் படம் 2023 ஐபிஎல் போட்டியில் பெங்களூரு – லக்னோ அணிகள் மோதிய போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆர்சிபி – சிஎஸ்கே கடைசி லீக் ஆட்டத்தில் தோனியின் பேட்டிங்கை பார்த்து கதறி அழுத ஆர்சிபி ரசிகை என்று பரவும் புகைப்படம் 2023ம் ஆண்டு லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:‘தோனியின் ஆட்டத்தால் கதறி அழுத ஆர்சிபி ரசிகை’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: False
