ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழல்களை எல்லாம் என் தலையில் கட்ட பார்க்கிறது தி.மு.க அரசு என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "கடந்த பத்து வருடங்களில் 4 வருடங்கள் மட்டுமே நான் ஆட்சி செய்தேன். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 6 ஆண்டுகால ஆட்சியின் ஊழல்களையும் என் தலையில் கட்டப்பார்க்கிறது திமுக அரசு - எடப்பாடி கே பழனிசாமி" என்று உள்ளது.

நிலைத் தகவலில், "உங்காத்தா.... ஆட்சியை உங்க வாயாலே ஊழலாட்சி ன்னு சொல்லவைத்தோம் பார்த்தியா" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை என்பவர் 2021 செப்டம்பர் 24ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை K Azees ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில தினங்களுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் தொடர்பான அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நான் நான்கு ஆண்டுகள் இரண்டு மாதம் முதலமைச்சராக இருந்தேன். நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகள் போட்டிருப்பேன் என்று பேசியிருந்தார்.

அசல் பதிவைக் காண: oneindia.com I Archive

இந்த சூழுலில், ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் எல்லாம் என்னுடைய ஆட்சியில் நடந்தது போல தி.மு.க குற்றம்சாட்டுகிறது என்ற வகையில் எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பாக ஏதும் செய்தி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

இதை பார்க்கும் போதே எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு என்று தெரிகிறது. இருப்பினும் இதையும் பலர் ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம். முதலில் ஏபிபி நாடு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்போது 2021 செப்டம்பர் 23ம் தேதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டு ஒன்றை அந்த ஊடகம் வெளியிட்டிருந்தது.

அதில், "4 ஆண்டுகள் 2 மாதம் முதல்வராக இருந்தேன், நினைத்திருந்தால் இப்போது அதிமுகவினர் மீது வழக்குகள் போடுவது போல, திமுகவினர் மீது எவ்வளவோ வழக்குகள் போட்டிருக்கலாம்; ஆனால், நாங்கள் அதை செய்யவில்லை - எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்" என்று இருந்தது.

இந்த நியூஸ் கார்டை எடுத்து விஷமத்தனமாக எடிட் செய்து வெளியிட்டிருப்பது உறுதியானது. இதை மேலும் உறுதி செய்ய ஏபிபி நாடு ஆசிரியர் மனோஜைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

அசல் பதிவைக் காண: Facebook

இதன் அடிப்படையில், ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் எல்லாம் என் தலையில் கட்டுகிறது தி.மு.க என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் எல்லாம் என் தலைமீது சுமத்தப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஜெயலலிதா ஊழல்களை என் தலையில் கட்டுகிறது தி.மு.க என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False