பீகாரில் மிகவும் மோசமாகக் கட்டப்பட்ட பாலம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பாலம் பீகாரில் கட்டப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வெறும் இரும்பு கம்பிகள் மட்டும் தெரியும் அளவுக்கு சிதைந்து போன பாலம் ஒன்றின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், "தரம்ன்னா தரம் அப்படி ஒரு தரம்

பாருங்கள் பீகார் பாலம்...🧐 ஒரு மூட்ட சிமெண்ட்லயே மொத்த பாலத்தயும் கட்டிருப்பானுகளோ எம்புட்டு சிக்கனம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பீகாரில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுவதாகச் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் பீகாரில் உள்ள ஒரு மோசமான நிலையில் உள்ள பாலம் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, சமூக ஊடகங்களில் பலரும் இந்த புகைப்படத்தைப் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. இவற்றுக்கு இடையே வங்க மொழியில் வெளியான செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில் இந்த பாலம் வங்கதேசத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டு, விரைவாக சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை என்று குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: dainikbayanno.com I Archive

மேற்கு வங்க மாநிலம் சம்பாப்பூர் ஒன்றியத்தில் உள்ள பதுகாலியில் உள்ள காலாபாராவில் உள்ள தெபுரா ஆற்றுப் பாலம் என்று குறிப்பிட்டிருந்தனர். கூகுள் மேப்-ல் அந்த பாலத்தைத் தேடினோம். அது கிளை ஆறுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. அந்த குறிப்பிட்ட ஊரில் ஏராளமான ஆற்றுப் பாலங்கள் இருந்தன. ஒரு பாலம் சற்று உடைந்த பகுதி போல தெரிந்தது. ஆனால் ஸ்ட்ரீட் மேப் அந்த பகுதியில் இல்லை என்பதால் அதை உறுதி செய்ய முடியவில்லை.

உண்மைப் பதிவைக் காண: kalerkantho.com I Archive

அதே நேரத்தில் வேறு சில வங்க மொழி செய்திகளிலும் இந்த பாலத்தின் வேறு சில புகைப்படம் வெளியாகி இருந்தது. இதன் மூலம் இந்த பாலம் வங்கதேசத்தைச் சார்ந்தது தான் என்பது உறுதியானது. நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வங்கதேச பிரிவினர் கூட இந்த புகைப்படம் வங்கதேசத்தைச் சார்ந்தது தான் என்று உறுதி செய்துள்ளனர்.

இது தொடர்பான கட்டுரை ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பீகாரின் உடையும் நிலையில் உள்ள பாலம் என்று பரவும் புகைப்படம் வங்கதேசத்தைச் சார்ந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பீகாரில் மிக மோசமான முறையில் கட்டப்பட்ட பாலம் விழும் நிலையில் உள்ளது என்று பரவும் புகைப்படம் வங்கதேசத்தைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பீகாரில் கட்டப்பட்ட தரமற்ற பாலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False