
கொளத்தூரில் பாஜக வேட்பாளராக நடிகை கஸ்தூரி அறிவிக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நடிகை கஸ்தூரி புகைப்படத்துடன் யாரோ வெளியிட்ட சமூக ஊடக பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “கொளத்தூர் பாஜக வேட்பாளர் அறிவிப்பு. நீண்ட இழுபறிக்கு பின்னர்! தமிழிசையின் ஆதரவின் மூலம் கொளத்தூர்-யில் போட்டியிட சீட் பெற்றார் நடிகை கஸ்தூரி! என்னை சிறையில் அடைத்த முக ஸ்டாலினை அரசியல் களத்தில் ஓட விடுவேன் என உணர்ச்சி பொங்க பேச்சு!” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “அரசியல் களத்தில் ஓட விடுவியா..?! நீ என்ன நாயா அவர் உன்னை துரத்தி ஓட..?! அல்வா கொடுக்கும் திமுக அப்படியே துண்கினு ஓடும்மே..!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக-வும் அதிமுக-வும் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இதில் பாஜக-வுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டும் வேட்பாளர் பட்டியல் வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில் நடிகை கஸ்தூரிக்கு கொளத்தூர் தொகுதியை பாஜக ஒதுக்கியுள்ளதாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பாஜக-வுக்கு சென்னையில் மயிலாப்பூர் தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவலுடன் எதிர்பார்த்த தி.நகர், வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகள் மறுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கொளத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் கஸ்தூரி போட்டியிடுகிறார் என்ற தகவல் தவறானது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

அதிமுக கூட்டணியில் பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்ட பட்டியல்கள் தொடர்பாக பாஜக வெளியிட்ட பதிவை அதன் எக்ஸ் தளத்திலிருந்து எடுத்தோம். அதில் கொளத்தூர் தொகுதி இடம் பெறவில்லை. அதிமுக சார்பில் அந்த தொகுதியில் சந்தான கிருஷ்ணன் என்பவர் போட்டியிட உள்ளதாக அதிமுக அறிவித்த செய்திகள் நமக்கு கிடைத்தன. அதிமுக கூட்டணியில் கொளத்தூர் தொகுதியில் அதிமுக-வே போட்டியிடுகிறது. இந்த நிலையில் கொளத்தூர் தொகுதி பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அங்கு கஸ்தூரி போட்டியிட உள்ளதாகவும் பரவும் தகவல் தவறானது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
முடிவு:
கொளத்தூர் தொகுதி பாஜக-வுக்கு ஒதுக்கப்படாத நிலையில் அங்கு பாஜக சார்பில் கஸ்தூரி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


