மோடியை உலகத் தலைவர்களுடன் ஒப்பிட்டு ஜி20 மாநாடு வரவேற்பு பேனர் வைக்கப்பட்டதா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

டெல்லியில் ஜி20 மாநாட்டையொட்டி பிரதமர் மோடியை உலகத் தலைவர்களுடன் ஒப்பிட்டு வரவேற்பு பேனர் வைக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

இந்தியப் பிரதமர் மோடியை வாழ்த்தி வைக்கப்பட்ட பேனரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இப்படியா வரவேற்பு குடுக்கறது? சுயவிளம்பர பிரியர் மோடி

*டெல்லியில் ஜி20 நாடுகளின் மாநாடு செப்டம்பர் 9 & 10ஆம் தேதிகளில்* *நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மற்ற நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு அரசு வெளியிட்டிருந்த பேனர் அதில் உலகளவில் மிக பிரபலமான தலைவர் என்று பிரதமர் மோடி குறிப்பிடப்பட்டிருக்கிறார். மற்ற தலைவர்கள் பின் தங்கியிருக்கின்றனர். இப்படியா வரவேற்பு கொடுப்பது என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Govinda Raj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 8ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த புகைப்படம் மற்றும் தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லியில் ஜி20 மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர், இங்கிலாந்து பிரதமர் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர். ஜி20 மாநாட்டையொட்டி வைக்கப்பட்ட வரவேற்பு பேனரில், உலகத் தலைவர்களில் முதல் இடத்தில் மோடி உள்ளார் என்று குறிப்பிட்டிருந்ததாக விமர்சித்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த புகைப்படத்தில் இந்தியா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது குடியரசுத் தலைவர், பிரதமர் தொடங்கி சாதாரண பா.ஜ.க தொண்டர் வரையில் அனைவரும் இந்தியா என்ற பெயரைத் தவிர்த்துவிட்டு பாரத் என்று பதிவிட்டு வருகின்றனர். எனவே, இப்போது வைக்கப்பட்ட பேனராக இருந்தால் அதில் பாரத் என்று குறிப்பிட்டிருப்பார்கள். இது பழைய புகைப்படமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. எனவே, இந்த புகைப்படம் தற்போது நடந்து வரும் ஜி 20 மாநாட்டையொட்டி வைக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: csmonitor.com I Archive

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2023 ஏப்ரல் மாதத்தில் இந்த புகைப்படத்தை ஒரு ஊடகம் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அந்த ஊடகமானது இந்த புகைப்படத்தை ஏபி என்ற செய்தி நிறுவனம் எடுத்ததாக குறிப்பிட்டிருந்தது. இதன் அடிப்படையில் ஏபி இமேஜஸ் தளத்திற்கு சென்று தேடிப் பார்த்தோம். புகைப்பட கலைஞர் பெயரை (Manish swarup) டைப் செய்து தேடினோம். ஏப்ரல் 6, 2023 அன்று அந்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. பிரபலமான உலகத் தலைவர்கள் வரிசையில் மோடி முதலிடத்தில் உள்ளார் என்பதைக் குறிக்கும் வகையில் டெல்லியில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட ஹோர்டிங் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: newsroom.ap.orgI Archive

உலக நாடுகளின் தலைவர்களுக்கு தங்கள் நாட்டு மக்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவு உள்ளது என்று மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தி பட்டியல் வெளியிட்டு வருகிறது. இதில் தொடர்ந்து முதலிடத்தில் மோடி உள்ளார். இது தொடர்பாக வைக்கப்பட்ட பேனர் இது. இந்த ஆய்வுவை வைத்து முன்பு வதந்தி பரப்பப்பட்டது. அது தொடர்பாக நம்முடைய ஃபேகட் கிரஸண்டோவில் வெளியான கட்டுரையை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஜி 20 மாநாடு 2023 செப்டம்பர் 9, 10 தேதிகளில் நடக்கிறது. ஆனால் இந்த புகைப்படம் 2023 ஏப்ரல் 6ல் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பேனர் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களை வரவேற்கும் வகையில் வைக்கப்பட்டது இல்லை என்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் பழைய படத்தை எடுத்து ஜி20 உடன் தொடர்புப்படுத்தி தவறாக பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.

முடிவு:

2023 ஏப்ரலில் வைக்கப்பட்ட பேனரின் புகைப்படத்தை எடுத்து, ஜி20 மாநாட்டையொட்டி வைக்கப்பட்ட பேனர் என்று தவறாக வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மோடியை உலகத் தலைவர்களுடன் ஒப்பிட்டு ஜி20 மாநாடு வரவேற்பு பேனர் வைக்கப்பட்டதா?

Written By: Chendur Pandian 

Result: False