
கரூரில் தவெக பிரசாரத்தின் போது ஆம்புலன்சில் தி.மு.க-வினர் நடனமாடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆம்புலன்சினுள் சிலர் நடனமாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நேற்று DMK காரனுங்க நடனம் ஆடிஉள்ளனர். உங்கள சும்மா விட மாட்டோம் அங்கிள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
உண்மை அறிவோம்:
கரூரில் நடந்த தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஆனால், கூட்டத்திற்கு இடையூறு செய்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொண்டு வரப்பட்டதாக தவெக தொண்டர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஆம்புலன்ஸ் உள்ளே தி.மு.க-வினர் நடனமாடியதாக வீடியோவை சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
“எதை சாதித்ததற்காக இவர்கள் ஆம்புலன்சில் ஆட்டம் ஆடுகிறார்கள் என்பது தெரியவில்லை” என்றெல்லாம் குறிப்பிட்டு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் உயிரிழப்புக்குக் காரணம் தி.மு.க-தான் என்பதற்கு ஆதாரம் கிடைத்துவிட்டது என்பது போல் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ கரூரில் தவெக பிரசார கூட்டம் நடந்தபோது எடுக்கப்பட்டதா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை செய்தி ஊடகங்கள் தங்கள் யூடியூப் பக்கத்தில் செப்டம்பர் 21, 2025 அன்று பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. கரூர் தவெக பிரசாரம் செப்டம்பர் 27, 2025 அன்று நடந்தது. அதற்கு 6 நாட்களுக்கு முன்பாகவே இந்த வீடியோ வெளியாகி இருந்தது.
தந்தி டிவி வெளியிட்டிருந்த வீடியோவில் “திருநெல்வேலியிலிருந்து நாங்குநேரி நோக்கிச் சென்ற அரசு நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் ஊழியர்கள் நடனமாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என்று குறிப்பிட்டிருந்தனர். இது ஆம்புலன்ஸ் இல்லை, அரசு நடமாடும் மருத்துவமனை. இதில் ஊழியர்கள் எப்போதும் இறுக்கமான மனநிலையிலேயே இருக்க வேண்டும், சிரித்தால் கூட தவறு என்று சொல்வார்கள் போல.
ஊழியர்கள் நடனமாடியது சரியா, தவறா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. ஆனால் இந்த வீடியோ கரூரில் 41 பேர் உயிரிழந்த போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை மட்டும் உறுதி செய்துள்ளோம். நெல்லையில் அரசு நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் ஊழியர்கள் நடனமாடிய காட்சியை, கரூரில் தவெக பிரசார கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது போன்று தவறாக வதந்தி பரப்பியிருப்பதைத் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கரூர் தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு பிறகு ஆம்புலன்சில் நடனமாடிய தி.மு.க-வினர் என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:‘ஆம்புலன்சில் நடனமாடிய தி.மு.க-வினர்’ என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
