FACT CHECK: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு நன்றி தெரிவித்தாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

ஒளிப்பதிவு திருத்த மசோதாவை தமிழ்த் திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வரவேற்று நன்றி தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒளிப்பதிவு திருத்த மசோதா திரைத்துறைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். அதை நிறைவேற்றினால் காலம் முழுவதும் மத்திய அரசு திரைத்துறையினர் நன்றிக்கடன் பட்டுள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த பதிவை வேலாயுதம் யாதவ் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஜூலை 2ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மத்திய அரசு கொண்டு வர உள்ள ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழ்த் திரைப்பட உலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள் பலரும் இந்த திருத்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் திரையுலகினர் தெரிவித்து வரும் எதிர்ப்பு பதிவுகளை மாற்றி, ஆதரவு தெரிவித்தது போன்று பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் சூர்யா, இயக்குநர்கள் தங்கர்பச்சான், சீனு ராமசாமி உள்ளிட்டோர் திரை உலகை விட்டு வெளியேறப்போவதாக அறிவித்தார்கள் என்று ஏற்கனவே விஷமத்தனமாக போட்டோஷாப் செய்யப்பட்ட நியூஸ் கார்டுகளை பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த மசோதாவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்று வரவேற்பு தெரிவித்ததாக பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று அறிய, நியூஸ் 7 தமிழ் ஊடகம் ஜூலை 3, 2021 அன்று வெளியிட்ட நியூஸ் கார்டை ஆய்வு செய்தோம். 

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அப்போது கார்த்திக் சுப்புராஜ் தொடர்பான அசல் நியூஸ் கார்டு கிடைத்தது. அதில், “ஒளிப்பதிவு திருத்த மசோதா கலை – பேச்சு சுதந்திரம் மீதான மிகப்பெரிய தாக்குதலாக இருக்கும். கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க மசோதாவுக்கு எதிராக ஓரணியில் திரள்வோம்” என்று கூறியதாக இருந்தது.

Archive

கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ட்வீட் பதிவை தேடினோம். கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக குரல் கொடுங்கள் என்ற வகையில் அவர் ட்வீட் வெளியிட்டிருந்தது தெரிந்தது. இதன் அடிப்படையில் கார்த்திக் சுப்புராஜ் ஒளிப்பதிவு திருத்த மசோதாவை வரவேற்றார் என பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஒளிப்பதிவு திருத்த மசோதாவை வரவேற்றதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு நன்றி தெரிவித்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False