
‘’நெடுஞ்சாலையில் கோடு போட்டவர் சரியாகப் போடவில்லை,’’ என்று கூறி இணையதளத்தில் பகிரப்பட்டு வரும் மீம்ஸ் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமது +91 9049053770 வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இந்த விவகாரம் பற்றி செய்தி பகிர்வதைக் கண்டோம்.

உண்மை அறிவோம்:
சாலையோரம் தென்னை ஓலை விழுந்து கிடப்பதை போலவும், அதனைக் கூட எடுத்துப் போடாமல் நெடுஞ்சாலை நிர்வாகத்தினர் அதனை சுற்றி அப்படியே வளைத்து, வெள்ளைக் கோடு போட்டுச் சென்றிருப்பதாகவும் இந்த மீம்ஸ்களில் கேலி செய்துள்ளனர்.
ஆனால், இந்த விவகாரம் டிரெண்டிங் ஆன நிலையில், இதுபற்றி தமிழ் ஊடகங்கள் பலவும் நேரில் சென்றே கள ஆய்வு செய்து, செய்தி வெளியிட தொடங்கியுள்ளன.
இதன்படி, குறிப்பிட்ட சாலை திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம், மணியக்காரன்பட்டியில் அமைந்துள்ளது. அந்த வெள்ளைக்கோடு வளைந்து செல்லும் இடத்தில், சாலையிலேயே காவிரி குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கப்பட்டு வால்வு அமைக்க, சிறிய பள்ளம் தோண்டியுள்ளனர். இதனால், அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மோதி விழாமல் எச்சரிக்கும் வகையில், உள்ளூர் மக்கள், தென்னை ஓலை போட்டு அந்த பள்ளத்தை (தொட்டியை) மூடி வைத்துள்ளனர். எனவேதான், சாலைப் பணியாளர்கள் அதனை சுற்றி வளைத்துச் செல்வதைப் போல, வெள்ளைக் கோடு வரைந்துள்ளனர்.

எனவே, உண்மை விவரம் தெரியாமல், அவசரப்பட்டு, இந்த மீம்ஸை சிலர் நகைச்சுவை நோக்கில் தயாரித்து பகிர, அதனை மற்றவர்களும் அப்படியே நம்பி ஷேர் செய்து வருகின்றனர் என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:யாருப்பா அந்த பெயிண்டர்?- உண்மை தெரியாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்!
Fact Check By: Pankaj IyerResult: Partly False
