
‘’இந்தியா கேட்டில் 95, 300 சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Mohammed Sait என்பவர் இந்த பதிவை ஜூலை 30, 2019 அன்று வெளியிட்டுள்ளார். அதில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைசி பேசும் வீடியோ ஒன்றை இணைத்துள்ளனர். அவர், ‘’டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் 95,300 சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர்களில் 61,395 பேர் முஸ்லீம்கள்,’’ என்ற புள்ளி விவரத்தை மேற்கோள் காட்டுகிறார்.
உண்மை அறிவோம்:
இந்தியா கேட் உண்மையில் எதற்காக கட்டப்பட்டது என்ற அடிப்படை உண்மை கூட தெரியாதவர், நாடாளுமன்ற எம்பியாக எப்படி இருக்கிறார், என்ற அதிர்ச்சியே இந்த வீடியோவை பார்த்தபோது ஏற்பட்டது. ஆம். இந்தியா கேட் என்பது பிரிட்டிஷ் இந்தியா படை சார்பாக, முதல் உலகப் போர் மற்றும் 2வது ஆங்கிலோ – ஆப்கன் போர் போன்றவற்றில் உயிர் நீத்த 70,000 வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டதாகும். அதில், 13,516 வீரர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் எழுதப்பட்டுள்ளன. இவர்களில் 13,220 பேர் முதலாம் உலகப் போரில் உயிர் நீத்தவர்கள் ஆவர். எஞ்சியவர்கள் 2வது ஆப்கன் போரில் இறந்தவர்கள் ஆவர். இந்தியா கேட் 1933ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதேபோல, முதலாவது உலகப் போரில் உயிர் நீத்த 13,220 வீரர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

இதன்படி, ஒரு பிரபல அரசியல்வாதியாக இருப்பவர் அதுவும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர், ஒரு முக்கியமான நினைவுச் சின்னம் பற்றிய அடிப்படை உண்மை கூட தெரியாமல் பேசுவதும், அதனை உண்மை என நம்பி பலர் சமூக ஊடகங்களில் தகவல் பகிர்வதும் வேதனையாக உள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இது தவறான தகவல்; உண்மை தெரியாமல் ஒவைசி பேசியுள்ளார், என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்தியா கேட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதா?
Fact Check By: Pankaj IyerResult: False
