இந்து முன்னணியினர் தாக்கப்பட்டதற்கு எச்.ராஜாதான் காரணம் என்று அர்ஜூன் சம்பத் சொன்னாரா!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

கோவையில் இந்து முன்னணியினர் தாக்கப்பட்டதற்கு எச்.ராஜாதான் காரணம் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

அர்ஜூன் சம்பத் படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கோவையில் இந்து முன்னணியினர் தாக்கப்பட்டதற்கு எச்.ராஜாதான் காரணம். பலமுறை தமிழக மக்கள் கூறியும் ஏன் எச்.ராஜாவிற்கு மனநல பரிசோதனை செய்யவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, கூட்டத்தில் ஒருவன் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 2ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்னர்.

உண்மை அறிவோம்:

இந்த நியூஸ் கார்டு நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போல இந்த நியூஸ் கார்டு உள்ளது. இதனால் இந்த நியூஸ் கார்டை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.

1) பொதுவாக நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டின் அதன் பின்னணி வாட்டர் மார்க் லோகோ இருக்கும். இதில் வாட்டர் மார்க் லோகோ இல்லை.

2) தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக உள்ளது.

இதனால், இந்த நியூஸ் கார்டு உண்மையானது இல்லை என்பது தெரிந்தது. இதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களைத் தேடினோம். அதே நேரத்தில், இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் சமூக ஊடகம் – இணைப் பிரிவு நிர்வாகிக்கு அனுப்பி இதன் நம்பகத்தன்மை பற்றியும் கேட்டிருந்தோம்.

இந்த நியூஸ் கார்டில் மார்ச் 2, 2020, மாலை 4 மணி என்று தேதி குறிப்பிட்டுள்ளனர். அதனால், குறிப்பிட்ட அந்த தேதியில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம்.

மார்ச் 2ம் தேதி அர்ஜூன் சம்பத் தொடர்பாக எந்த ஒரு பதிவையும் நியூஸ் 7 தமிழ் வெளியிடவில்லை என்பது தெரிந்தது. மேலும் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு டெல்லி பாலியல் குற்றவாளி தொடர்பான நியூஸ் கார்டை அந்த ஊடகம் வெளியிட்டிருந்தது தெரிந்தது. இதன்மூலமாக, இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியானது.

அதே நேரத்தில், நம்மிடம் பேசிய நியூஸ் 7 தமிழ் ஆன்லைன் பிரிவு நிர்வாகி, இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார்.

Facebook LinkArchived Link

ஒருவேளை அர்ஜூன் சம்பத் பேட்டி ஏதும் அளித்துள்ளாரா, அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். கோவையில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் மோதல் தொடர்பான செய்திகள் கிடைத்தனவே தவிர, எச்.ராஜாதான் காரணம் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

Search LinkFacebook Archived Link

அர்ஜூன் சம்பத் தன்னுடைய அறிக்கைகளை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். எச்.ராஜாவுக்கு எதிராக ஏதாவது கருத்து சொல்லியுள்ளாரா என்று அவரது ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம். அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

இதன் மூலம், “கோவை இந்து முன்னணி, பா.ஜ.க தொண்டர்கள் மோதலுக்கு எச்.ராஜாதான் காரணம் என்றும், எச்.ராஜாவுக்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் எச்.ராஜா மனநிலையை ஏன் பரிசோதனை செய்யவில்லை என்றும் அர்ஜூன் சம்பத் கேள்வி எழுப்பியதாக பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்து முன்னணியினர் தாக்கப்பட்டதற்கு எச்.ராஜாதான் காரணம் என்று அர்ஜூன் சம்பத் சொன்னாரா!

Fact Check By: Chendur Pandian 

Result: False