
கங்கை நதி மிகவும் தூய்மையாக மாறிவிட்டது போலவும், அதில் இருந்து பிரியங்கா காந்தி தண்ணீர் அருந்துவது போலவும் ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
உண்மை அறிவோம்:
மறுப்போர் இல்லை…
கங்கை நதி முன்பு இருந்த நிலை, இப்போது இருக்கும் நிலை என்று கொலாஜ் செய்யப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. முதல் படத்தில், கங்கை நதி மாசடைந்து, சாக்கடை போல உள்ளது. அதில் மன்மோகன் சிங் படம் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு படத்தில் மிகத் தெளிந்த நீர் பாயும் கங்கையில் இருந்து பிரியங்கா காந்தி நீர் அள்ளி பருகுவது போல உள்ளது. இப்போது என்று அதில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி படமும் உள்ளது.
இந்திய தேசிய ராணுவம் என்ற ஃபேஸ்புக் குழு ஏப்ரல் 27ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. மறுப்போர் இல்லை என்று தலைப்பிட்டு இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. கங்கை நதியை பிரதமர் மோடி சுத்தம் செய்துவிட்டார், அதில் இருந்து பிரியங்கா தண்ணீர் அருந்துகிறார் என்று நினைத்து பலரும் அதிக அளவில் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
கங்கை நதியை தூய்மைப்படுத்த தனி துறையையே பிரதமர் மோடி உருவாக்கினார். இதன் அமைச்சராக நிதின் கட்கரி உள்ளார். கங்கை தூய்மைப் பணி இன்னும் முடியவில்லை. இந்நிலையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய திட்டமிட்டோம்.
கடந்த மார்ச் மாதம் உத்தரபிரதேசத்தில் கங்கை ஆற்றில் படகில் பயணம் செய்தபடி பிரசாரம் மேற்கொண்டார் பிரியங்கா காந்தி. அப்போது கங்கை ஆற்றுக்கு வணக்கம் செலுத்தி தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அப்போது, கங்கை நதியின் நீரை அருந்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த நிகழ்வின் படத்தை எடுத்து, மிகத் தூய்மையாக ஓடும் நதியில் இருந்து பிரியங்கா தண்ணீர் அருந்துவது போல மார்ஃபிங் செய்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. நம்முடைய www.factcrescendo.com இந்தி பிரிவு இதேபோன்று ஒரு ஃபேஸ்புக் பதிவை ஆய்வு செய்து பொய் என்று கண்டறிந்துள்ளது. இது தொடர்பான செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
தமிழில் நம்முடைய ஆய்வை தனியாக மேற்கொண்டோம்… முதலில், கங்கை நதி தூய்மைப் பணி எந்த அளவில் உள்ளது என்று ஆய்வு மேற்கொண்டோம். 2022ம் ஆண்டுக்குள் கங்கையை முழுமையாக சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது தெரிந்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தில், மன்மோகன் சிங் இருக்கும் பகுதியை மட்டும் தனியாக எடுத்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். பல பதிவுகளில் இந்த படம் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிந்தது. மேலும், அந்த படத்தை தேடும்போதே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு பொய் என்பதற்கான பல செய்திகளும் கிடைத்தன.


குப்பைகளுடன் காட்சி அளிக்கும் கங்கை படம், வாரணாசியில் 2009ம் ஆண்டு எடுக்கப்பட்டது உண்மைதான். இந்த படத்தை gettyimages வெளியிட்டுள்ளது.
இரண்டாவதாக, பிரியங்கா காந்தி தண்ணீர் அருந்தும் படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இந்த படம் மார்பிங் செய்யப்பட்டது என்பதற்கான செய்தி கிடைத்தது. மேலும், கங்கை நதி தூய்மைத் திட்டத்திற்கான அமைச்சர் நிதின் கட்கரியின் சமீபத்திய பேட்டியும் கிடைத்தது.


ஹரித்வாரில் தெளிந்த நீரோடையாக ஓடும் கங்கை படத்தை, வாரணாசியில் இருப்பதுபோல வைத்து மார்ஃபிங் செய்யப்பட்டிருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். அந்த செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
கங்கை நீரை பிரியங்கா அருந்தியது தொடர்பான வீடியோ பதிவு ஒன்று கிடைத்தது. அதில் அவர் நீரை சில மிடறு குடித்தார்.
நிதின் கட்கரியின் பேட்டியில், கங்கை நதி 30 சதவிகிதம் தூய்மைப்படுத்தப்பட்டுவிட்டது. அதனால், பிரியங்கா காந்தி கங்கை நீரை அருந்தலாம் என்று கூறியிருந்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கங்கை நதி தூய்மைப்பணி இன்னும் முடியவில்லை. 30 சதவிகிதம் பணி மட்டுமே முடிந்துவிட்டதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 2022க்குள் கங்கை தூய்மைப்பணி முடிக்கப்படும் என்று பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கங்கை நீர் சுத்தமாக இருப்பதுபோன்ற படம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்று Fact Crescendo உள்ளிட்ட உண்மை கண்டறியும் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் அடிப்படையில், மேற்கண்ட பதிவு போலியானது, தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
