
தெருவுக்குள் நுழைந்ததால் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டதாக கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள, தலையில் அங்கும் இங்குமாக முடி மழிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஒரு தெருவிற்குள் நுழைந்தால் தலித்துகளை இது போல தண்டிக்கும் தேசத்தில் தான், அனைவருக்கும் சமமான போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்று குறிப்பிடவில்லை. சிறுவர்களைத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர், அவர்களைப் பற்றி வேறு எந்த தகவலையும் அளிக்கவில்லை. இந்த பதிவை, ஞா.தினேஷ் என்பவர் 2019 ஜூலை 30ம் தேதி பகிர்ந்துள்ளார்.
உண்மை அறிவோம்:
சிறுவர்களைப் பற்றி எந்த தகவலும் தெரிவிக்காததால், அந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2016ம் ஆண்டு முதல் இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது.

இந்த சிறுவன் படத்துடன் கூடிய பதிவு நிறைய வங்க மொழியில் இருந்தது. அதை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில் ஒருவர் இந்த சிறுவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டு இருந்தனர். இவர்கள் உணவைத் திருடியதால் மரத்தில் கட்டிவைத்து அடித்ததாகவும் தலையில் முடியை மழித்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்த பதிவை 2016 ஜூலை 28ம் தேதி வெளியிட்டு இருந்தனர். அதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
மற்றொரு பதிவில், இந்த சிறுவர்கள் பர்மாவைச் சார்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். “மியன்மாரில் (பர்மா) இஸ்லாமியர்களை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அங்குள்ள இஸ்லாமிய பெரியவர்கள், குழந்தைகள் தாக்கப்படுகின்றனர்… பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். ஆனால், அரேபிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த பதிவு 2018ம் ஆண்டு வெளியாகி இருந்தது.
மற்றொரு பதிவில், இவர்கள் நோபாள நாட்டில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் அனுமதியின்றி தண்ணீர் எடுத்து பருகியதால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தனர். இப்படி இந்த படத்தை வைத்துப் பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. ஆனால், இது 2017ம் ஆண்டு பகிரப்பட்டு இருந்தது. இந்த ஃபேஸ்புக் பதிவை அடிப்படையாகக் கொண்டு உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில், இந்த சம்பவம் வங்கதேசத்தில் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த படம் பற்றிய உண்மையான தகவல் கிடைக்கிறதா என்று தேடியபோது, தொடர்ந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் வதந்திகளே கிடைத்தன. அப்போது, இந்த புகைப்படம் தொடர்பாகத் தெலுங்கு மொழியில் மேற்கொள்ளப்பட்ட உண்மை கண்டறியும் ஆய்வு ஒன்று கிடைத்தது. அதில், ஆந்திராவில் கோவிலில் பிரசாதம் கேட்டதற்காக தாக்கப்பட்ட சிறுவர்கள் என்று வதந்தி பரவியதும் அது உண்மையில்லை என்று அவர்கள் ஆய்வு நடத்தி கண்டறிந்ததும் தெரிந்தது. அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
அந்த ஆய்வில் கூட, இந்த படத்தின் உண்மை விவரத்தை வெளியிடவில்லை. 2016ம் ஆண்டு முதல் இந்த படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதன் அடிப்படையிலும், இந்த சம்பவம் நடைபெற்றது வங்கதேசம், நேபாளம், இந்தியா என்று பல வதந்திகள் கூறுவதன் அடிப்படையிலும் பொய்யான செய்தி என்று நிரூபித்திருந்தனர்.
ஒடிஷா நியூஸ் இன்சைட் என்ற இணையதளத்தில் இது தொடர்பான செய்தி ஒன்று கிடைத்தது. அதில், தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் வதந்தி வேகமாக பரவி வருகிறது. உண்மையில், இந்த சம்பவம் வங்கதேசத்தில் நடந்தது. உணவு திருடியதற்காக இந்த சிறுவர்கள் தாக்கப்பட்டனர் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்த செய்தியை 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி வெளியிட்டு இருந்தனர்.
இந்த சம்பவம் வங்கதேசத்தில் நடந்தது என்பதற்கான ஆதாரத்தை அவர்கள் வழங்கவில்லை. அதே நேரத்தில், 2016ம் ஆண்டு ஜூலை 23 மற்றும் 28ம் தேதி சமூக ஊடகங்களில் பரவிய பதிவுகளின் போட்டோக்களை வைத்திருந்தனர். 23ம் தேதி வெளியான பதிவில், இந்த சம்பவம் வங்கதேசத்தில் நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 28ம் தேதி வெளியான பதிவில், தலித் சிறுவர்களுக்கு நடந்த கொடுமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த தகவல் பொய்யானது என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
2016ம் ஆண்டு வங்கதேசத்தில் உணவு திருடியதாக சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்று தேடினோம். ஆனால், இந்த பதிவு தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிவந்த செய்தி, படங்களே கிடைத்தன.
நம்முடைய ஆய்வில்,
2016ம் ஆண்டு முதல் இந்த வதந்தி பரவி வருவது உறுதியாகி உள்ளது.
இந்த சம்பவம் நேபாளம், வங்கதேசம், மியான்மாரில் நடந்தது என்று தொடர்ந்து பல பதிவுகள் வெளியாகி வந்துள்ளது தெரிகிறது.
வங்கதேசத்தில் உணவு திருடியதற்காக சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று 2016ம் ஆண்டு வெளியான சில செய்திகள் கூறுகின்றன.
மற்ற மொழிகளில் மேற்கொள்ளப்பட்ட உண்மை கண்டறியும் ஆய்வுகளும் இந்த சம்பவம் வங்கதேசத்தில் நடந்தது என்றே குறிப்பிட்டுள்ளன.
இந்த ஆதாரம் அடிப்படையில், ஒரு தெருவுக்குள் நுழைந்ததால் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டார்கள் என்ற தகவல் உண்மையில்லை என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“தெருவுக்குள் நுழைந்ததால் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டனர்!” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
