
‘’மார்த்தாண்டம் பகுதியில் நாய் இறைச்சி விற்றவர்கள் பிடிபட்டனர்,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் சில புகைப்படங்களை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
கடந்த 2018, ஜனவரி 14ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதனை இன்றளவும் பலர் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதை காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட சம்பவம் போல ஏதேனும் உண்மையிலேயே மார்த்தாண்டம் பகுதியில் நிகழ்ந்ததா என்ற சந்தேகத்தில் ஆய்வு செய்ய தொடங்கினோம். முதலில், இதுதொடர்பாக ஏதேனும் செய்தி விவரம் கிடைக்கிறதா என தேடியபோது, சில நாள் முன்பாக வெளியான ஒரு இணையதள செய்தியை கண்டோம்.
அந்த செய்தியில் நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படங்களை அப்படியே பகிர்ந்து, மொட்டையாக மார்த்தாண்டம் பகுதியில் நாய் இறைச்சி விற்றவர்கள் கைது, என்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர்.

Onetamilnews Link | Archived Link |
எனவே, பழைய ஃபேஸ்புக் பதிவில் உள்ளதை உண்மை என நம்பி தற்போது அதனை இந்த இணையதளம் உள்ளிட்டவற்றில் செய்தியாக பகிர, மீண்டும் இந்த தகவல் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.
இதையடுத்து, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படங்களை ஒவ்வொன்றாக கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்ய தொடங்கினோம். முதலில் உள்ள புகைப்படம் பற்றி தகவல் தேடியபோது, இது ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பானது என்று தெரியவந்தது.

இதன்படி, கிருஷ்ணா மாவட்டம், ஜி.கொண்டுரு பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு நாய் இறைச்சி விற்றவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அப்போது எடுத்த புகைப்படத்தை மார்த்தாண்டம் பகுதியில் நிகழ்ந்தது போல பகிர்ந்து வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெரியவருகிறது.
Asianet News Link | Archived Link |
இதற்கடுத்தப்படியாக, 2வது புகைப்படத்தையும் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இந்த புகைப்படமும் 2016ம் ஆண்டு முதல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒன்று என தெளிவானது.

கடந்த 2016ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள கச்சிபோவ்லி பகுதியில் செயல்படும் ஷா காவுஸ் ஓட்டலில் நாய் இறைச்சி பிரியாணியில் கலந்து விற்கப்படுவதாக, இந்த புகைப்படத்தை இணைத்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியுள்ளனர். இதன்பேரில் போலீசார் அப்போதே விசாரணை நடத்தி, இது போலியான தகவல் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.
The Hindu News Link | Archived Link |
இறுதியாக, 3வது புகைப்படத்தையும் இதேபோல ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதுவும் கடந்த சில ஆண்டுகளாகவே இணையத்தில் பகிரப்படும் புகைப்படங்களில் ஒன்றாக உள்ளதென்று தெரிந்தது.

இது முதலில் கொல்கத்தாவில் நாய் இறைச்சி விற்பனை என்ற தலைப்பில் பரவியுள்ளது. பின்னர் படிப்படியாக தமிழ் மொழியிலும் உருமாறியுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்குறிப்பிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்ற புகைப்படங்கள் அனைத்துமே வெவ்வேறு நிகழ்வுகளுடன் தொடர்புடையவை என்று தெரியவருகிறது. இவற்றை எடுத்து மார்த்தாண்டம் பகுதியில் நாய் இறைச்சி விற்பனை என்று சிலர் தகவல் பகிர, அதனை இன்றளவும் உண்மையை சரிபார்க்காமல் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மார்த்தாண்டம் பகுதியில் நாய் இறைச்சி விற்றது இவர்களா?
Fact Check By: Pankaj IyerResult: False
