
‘’மல்லையா, நிரவ் மோடி உள்பட 36 தொழிலதிபர்கள் இந்தியாவை விட்டு ஓடிவிட்டார்கள் என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Archived Linkஅரசியல்
I Support Thirumurugan Gandhi என்ற ஃபேஸ்புக் குழு, கடந்த ஏப்ரல் 16ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மோடி, மல்லையா உள்ளிட்ட 36 தொழிலதிபர்கள், நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக, அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியுள்ளதாகச் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதிலேயே மோடியின் புகைப்படத்தை பகிர்ந்து, ‘’இந்திய வரலாற்றில் இதைவிட சிறந்த அடிமை கார்ப்பரேட்களுக்கு கிடைத்ததில்லை. இன்னொரு முறை தேர்ந்தெடுத்தால் நம் அடுத்த தலைமுறை நம்மை மன்னிக்காது,’’ எனவும் எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளது ஒரு அரசியல் சார்பான குழுவாகும். அவர்களின் ஐடி முதல், கவர் புகைப்படம், வெளியிடும் பதிவுகள் என அனைத்துமே, திருமுருகன் காந்தி என்பவரை வெளிப்படையாக ஆதரிப்பவையாக உள்ளன.
இந்நிலையில், இவர்கள் வெளியிட்டுள்ள இந்த பதிவில், எந்தளவுக்கு உண்மை கலந்துள்ளது என ஆய்வு செய்தோம். முதலில், கூகுள் உதவியுடன் இப்படி ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா, என தேடிப் பார்த்தோம். அதில், இச்செய்தி உண்மைதான் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.

இதன்படி, கடந்த ஏப்ரல் 15ம் தேதியன்று, அமலாக்கத்துறை இத்தகைய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சுஷன் மோகன் குப்தா என்பவருக்கு ஜாமீன் கிடைப்பதை எதிர்த்து, டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை சார்பாக, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சுஷன் மோகன் குப்தா, நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 36 தொழிலதிபர்கள், கடந்த சில ஆண்டுகளுக்குள் இந்தியாவைவிட்டு தப்பியோடி விட்டார்கள், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றிய விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவு, ஏப்ரல் 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தி ஏப்ரல் 15ம் தேதி வெளியாகியுள்ளது. எனவே, இப்படியான சம்பவம் நடந்தது உண்மைதான் என தெரியவருகிறது.
அதேசமயம், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள ‘’இந்திய வரலாற்றில் இதைவிட சிறந்த அடிமை கார்ப்பரேட்களுக்கு கிடைத்ததில்லை.. இன்னொரு முறை தேர்ந்தெடுத்தால் நம் அடுத்த தலைமுறை நம்மை மன்னிக்காது,’’ போன்ற வார்த்தைகளும், மோடியின் புகைப்படமும், இதனை வெளியிட்ட நபரின் தனிப்பட்ட கருத்தாகும். இதற்கு மோடிதான் காரணம் என, அமலாக்கத்துறை எந்த இடத்திலும் கூறவில்லை. எனவே, சுய அரசியல் லாபத்திற்காக, இத்தகைய சித்தரிக்கப்பட்ட கருத்தை, உண்மைச் செய்தியுடன் கலந்து வெளியிட்டுள்ளதாக, தெரியவருகிறது.
இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, பார்க்கும்போது, பாதி உண்மை; பாதி சொந்த கருத்து கலந்த ஒன்றாக, இந்த ஃபேஸ்புக் பதிவு உள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு, பாதி உண்மையும், பாதி சொந்த கருத்தும் கலந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிரும்பட்சத்தில், பாதிக்கப்பட்ட நபர் யாரேனும் உங்கள் மீது புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:36 தொழிலதிபர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு மோடி காரணமா?
Fact Check By: Parthiban SResult: Mixture
