கீழடியில் இந்து கடவுள்களின் சிலை கிடைத்ததாக எச்.ராஜா பேசினாரா?

சமூக ஊடகம் | Social

கீழடியில் இந்து கடவுள்களின் சிலை கிடைத்தது என்று எச்.ராஜா பேசுகிற ஒரு வீடியோவை பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வைரல் வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Video Link 

காஞ்சி செந்தில் 2.0 என்பவர் இந்த வீடியோ பதிவை செப்டம்பர் 24, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும் ஒரு காட்சியை இணைத்துள்ளனர். இதன் மேலே, ‘’கீழடி பற்றிய உண்மை தெரிஞ்ச உடனே இந்து விரோத கூட்டம் கீழடி பற்றி பேச மாட்டாங்க பாருங்க,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
மேற்குறிப்பிட்ட வீடியோவில் பேசும் எச்.ராஜா, ‘’கீழடியில் ஆராய்ச்சி நடக்கிறது. கீழடியின் ஆராய்ச்சி தமிழனின் தொன்மையை காட்டுகிறது. அதை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் என்ன சொல்கிறார் என்றால், இரண்டு மூன்று மத சின்னங்கள் தான் கிடைத்து இருக்கிறது. அது என்னவென்று ஏன் சொல்லவில்லை. அங்கு என்ன கிடைச்சு இருக்கு விநாயகரும் சிவலிங்கமும் கிடைச்சு இருக்கு. 2500 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழனின் வாழ்க்கையில், அவன் வாழ்ந்தது எப்படி என காட்டக்கூடிய தொல்லியல் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது சிவலிங்கமும், கணேசமூர்த்தியும்,’’ எனக் குறிப்பிடுகிறார்.

இந்த வீடியோவில் எச்.ராஜா பேசும்போது, பின்னணியில் ‘’Hindu Daa – ஹிந்து அகமும் புறமும்’’ என எழுதியிருந்ததை காண முடிந்தது. இதன் அடிப்படையில் தகவல் தேடினோம். 

கூகுளில் இதுதொடர்பான கீவேர்ட்களை பயன்படுத்தி தேடியபோது, முதலிலேயே எச்.ராஜா பேசிய மேற்கண்ட வீடியோவின் முழு விவரம் கிடைத்தது. ஆனால், இது தற்போது வெளியான வீடியோ இல்லை, கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி வெளியிடப்பட்ட வீடியோவாகும். 

மேற்கண்ட வீடியோவில், தமிழர்கள் இந்துதான் என்பதற்கான தரவுகளை மேற்கோள் காட்டி எச்.ராஜா பேசுவதைக் காண முடிகிறது. பேச்சின் இடையே நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ள காட்சியும் வருகிறது.

இதன்படி, எச்.ராஜா, கடந்த பிப்ரவரி மாதம் கீழடி ஆய்வு பற்றி பேசியுள்ளார். ஆனால், கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பற்றி விரிவான அறிக்கை வெளியிடப்பட்டது இவ்வாண்டு செப்டம்பரில்தான். அதற்கும் முன்பாகவே, சமூக ஊடகங்களில் வெளியான சில தகவல்களின் அடிப்படையில்தான் எச்.ராஜா, கீழடியில் சிவன், விநாயகர் சிலைகள் கிடைத்ததாகக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

கீழடியில் இருந்து என்னென்ன கிடைத்தது என்பது பற்றி செப்டம்பர், 2019ல்தான் அனைவருக்குமே தெரியும். அப்போதுதான் அதுதொடர்பான ஆய்வறிக்கையை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில், கீழடியில் இருந்து எந்த சாமி சிலைகளும் எடுக்கப்படவில்லை, எனக் கூறப்பட்டிருந்தது. கீழடியில் எந்த மத அடையாளமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, செப்டம்பர் 19, 2019 அன்றுதான் கீழடி ஆய்வு பற்றிய விரிவான அறிக்கை, அங்கு கிடைத்த பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதற்கு முன்பு, 3 கட்ட ஆய்வுப் பணிகள் நடந்திருந்தாலும் அதில் விரிவான தகவல்கள் கீழடி பற்றி தெரிய வரவில்லை. தற்போது முடிவடைந்த 4ம் கட்ட ஆய்வுப் பணியில்தான் விரிவான தகவல்கள், சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

Vikatan News Link News18 Tamil LinkHindu Tamil Link

கீழடி 4ம் கட்ட ஆய்வறிக்கை வெளியான பிறகு பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவின. அதனை எந்த மதமும் சாராத கலாச்சாரம் என சிலரும், இந்து மதம் சார்ந்தது என சிலரும் தகவல் பகிர்ந்தனர். அதில் ஒன்றுதான் மேற்கண்ட வீடியோ பதிவும். ஆனால், அதில் இடம்பெற்றுள்ள எச்.ராஜா பேசும் காட்சி, கீழடி 4ம் கட்ட ஆய்வறிக்கை வெளியான பின் நிகழ்ந்தது இல்லை, அது 2019 பிப்ரவரியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசப்பட்டதாகும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பழைய வீடியோவை புதிய தகவலுடன் இணைத்து, தங்களது சுய லாபத்திற்காக தவறான தகவல் பரப்பியுள்ளனர் என தெரியவருகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான வீடியோ, செய்தி, புகைப்படம் போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:கீழடியில் இந்து கடவுள்களின் சிலை கிடைத்ததாக எச்.ராஜா பேசினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

1 thought on “கீழடியில் இந்து கடவுள்களின் சிலை கிடைத்ததாக எச்.ராஜா பேசினாரா?

  1. இவர்கள் முழுக்க இந்துவுக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் ஏதோ விமர்சனம் செய்வது போல் செய்கிறார்கள். முதலில் கீழடி சம்பந்தமாக இதற்கு முன் வந்த பொய் தகவல்களை சுட்டிக்காட்டியது போல் தெரியவில்லை. இது முழுக்க முழுக்க கிறிஸ்தவம் பிறந்த ஒரு இணையதள பக்கமாகத் தான் இருக்கிறது இது தகவல் சரிபார்க்கும் தன்பக்கம் இல்ல இதைப்பற்றி ஏற்கனவே விமர்சித்து நான் ஒரு பதிவு போட்டிருந்தேன் என் பேஸ்புக் பக்கத்தில் . இதையெல்லாம் பொருட்டாக மதித்தால் நீங்கள் அறிவற்றவர் என்று அர்த்தம். இவர்கள் அனைத்து பதிவுகளின் நீங்கள் உற்று கவனித்துப் பாருங்கள் முழுக்க முழுக்க ஒரு சார்பானது.
    இந்தப் பக்கத்தை நம்புவதற்கு நீங்களாக சொந்தமாக படித்து சரி பார்த்துக் கொள்வது நல்லது இது தேவையற்ற வேலை ஊரை ஏமாற்றும் வேலை , நீங்கள் படிப்பதற்கும் பார்ப்பதற்கும் அருகதையற்ற பக்கம் இது.

Comments are closed.